வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 147
ஏழாவது முளை துண்டிக்கப்படாமற் போனதை சமூகத் தலைவன் ஜனத்திரளுக்குத் தெரிவித்தான். ஜனங்களின் அனுதாபம் பந்துலன் பக்கம் இருந்தது.
வீட்டுக்கு வந்த மல்லிகா, பந்துலனுடைய முகத்தில் கோபமும், துக்கமும் ஒருங்கே நடனமாடுவதைப் பார்த்தாள். உடனே தன்னுடைய விசனத்தை மறந்தவளாய், அவனை ஆஸ்வாசப்படுத்த முயன்றாள்.
“பெரிய ஏமாற்றம்! மல்லிகா! என்னை ஏமாற்றி விட்டார்கள்; பெரிய சூழ்ச்சி நடந்திருக்கிறது. நான் இதை எதிர்பார்க்கவே இல்லை.”
“சூழ்ச்சியா! என்ன நடந்தது?”
“ஒவ்வொரு முளையின் நடுப்பாகத்திலும், இரும்புக் கம்பிகளை வைத்துப் பொருத்தியிருக்கிறார்கள். ஐந்தாவது முளை வெட்டப்படும் வரை நான் கவனிக்கவில்லை. ஆறாவது முளை வெட்டப்பட்டு வீழ்ந்தபோது, கணார் என்ற சப்தம் கேட்டது. சூழ்ச்சியை அறிந்தேன். இந்தச் சப்தத்தைக் கேளாதிருந்தால் ஏழாவதையும் வெட்டியிருப்பேன். ஆனால் கேட்டவுடன் என் கை எழவில்லை. மனம் என்னோடு போராட ஆரம்பித்துவிட்டது.”
“இத்தனை சூழ்ச்சியா! இவ்விதம் செய்தவன் மிகப் பெரிய நீசத்தனம் படைத்தவனாய் இருக்க வேண்டும்.”
“யார் இவ்விதம் செய்தார்கள் என்பது எனக்குத் தெரியாது. ரோஜ் மல்லன் மீது எனக்குக் கோபமில்லை. அவன் சமூகத்தின் ஒழுங்கையே தெரிவித்தான். அதிகமான பேரும் அவனை ஆதரித்தனர். ஆனால் மல்லிகா! குசீனாராவில் என்னை நேசிப்பவர்கள் அதிகமாயில்லை என்பதை நினைக்கும் போது தான் எனக்கு மிகுந்த துக்கமாயிருக்கிறது.”
“பந்துலமல்லன் குசீனாரா மீது கோபம் அடைந்து விட்டானா?”
“இல்லை மல்லிகா! குசீனாரா என் தாய். அவளுடைய மடியிலே தான் இந்தச் சரீரம் வளர்ந்தது. அவளுடைய போஷிப்பிலே தான் நான் மனிதன் ஆனேன். ஆனால், இனி மேல் நான் ஒரு கணமும் இங்கு வசிப்பதற்கில்லை!”
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 147, புத்தகங்கள், பக்கம், மல்லிகா, நான், முளை, தான், அவனுடைய, கங்கை, வால்காவிலிருந்து, வெட்டப்பட்டு, என்னை, பெரிய, மீது, அவளுடைய, குசீனாரா, அவனை, இவ்விதம், இந்தச், ஏழாவது, ஆறாவது, ஜனங்கள், சிறந்த, முளையை, போது, பந்துலன், பந்துலனுடைய, சப்தம், தெரிவித்தான்