வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 130
“நல்லது. ஆனால் உனக்கு இந்த அரச மாளிகைகளைக் கண்டால் ஏன் இவ்வளவு வெறுப்பு ஏற்படுகிறது?”
“ஏனா? என் தகப்பனாரின் அந்தப் பெரிய மாளிகையே என்னை உதாசீனம் அடையும்படி செய்து விட்டது. அது நமக்கெல்லாம் மாளிகை. ஆனால் அங்கிருந்த அடிமைகளுக்கு? இந்த அரச மாளிகையோ அதை விட ஆயிரம் மடங்கு பெரியது. இங்கு என்னையும் உன்னையும் தவிர மற்ற எல்லோரும் அடிமைகள் - வேலைக்காரிகள். இரண்டு சுதந்திர மனிதர்களுக்காக ஆயிரக்கணக்கான அடிமைகள் வசிக்கும் மாளிகையை, சுதந்திர மனிதர்கள்
வாழும் மாளிகையாகச் சொல்ல முடியாது. ஆனால் பிரவாஹன்! உன்னுடைய இதயம் இவ்வளவு கல்லாகப் போய் விட்டதைப் பார்க்க நான் ஆச்சரியப்படுகிறேன்.”
“அதனால்தான் இவ்வளவு கடுமையான சொல்லம்புகளைத் தாங்க முடிகிறது.”
“இல்லை, மனிதன் இப்படி ஆகிவிடக் கூடாது.”
“அன்பே! நான் மனிதனாவதற்கல்ல; திறமைசாலியாகவே முயன்றேன். ஆனால் அந்த நாட்களிலே திறமைசாலி என்ற தகுதி என்னை வந்து அடையும் பொழுது நான் இந்த ராஜமாளிகையிலே வாழ்ந்து கொண்டிருப்பேன் என்று எண்ணியதே இல்லை.”
“நீ என்னைக் காதலித்ததற்காக வருந்தவில்லையா, பிரவாஹன்?”
“குழந்தைகளுக்குத் தாய்ப் பாலைப்போல, உன்னுடைய காதலை நான் எவ்வித சிரமமுமின்றிப் பெற்றேன். அது என்னுள் ஒரு பகுதியாகவே கலந்து போய் விட்டது. நான் இந்த உலக வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுப்பவன் லோபா! ஆயினும் உன் காதலின் மதிப்பை நன்கு உணர்ந்திருக்கிறேன். மனத்தின் போக்கு எப்பொழுதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. எப்பொழுதாவது மனதிலே பலவீனம் ஏற்படும்பொழுது எனக்கு வாழ்க்கையே சிரமமானதாக மாறி விடுகிறது. அந்தச் சமயங்களிலெல்லாம், உனது காதலும், உன்னுடைய நற்குணமுமே எனக்குக் கைகொடுத்துக் காப்பாற்றுகின்றன.”
“ஆனால் நான் எவ்வளவு தூரம் உனக்குக் கை கொடுத்து உதவ
விரும்புகிறேனோ அவ்வளவு தூரம் என்னால் செய்ய முடியவில்லையே என்பதற்காக மிகவும் வருந்துகிறேன், பிரவாஹன்!”
“ஏனென்றால், நான் அரசாட்சி செய்வதற்காகவே தோன்றியவன்.”
“ஆனால், ஒரு காலத்தில் நீ பிராமண மகானாக ஆக வேண்டுமென்று துடித்துக் கொண்டிருந்தாயே!”
“அந்தக் காலத்தில் நான் பாஞ்சாலபுர (கனோஜ்) ராஜாமாளிகையின் சொந்தக்காரன் என்பது எனக்குத் தெரியாது.”
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 130, நான், புத்தகங்கள், இவ்வளவு, பக்கம், உன்னுடைய, பாஞ்சால, பிரவாஹன், வால்காவிலிருந்து, கங்கை, போய், தூரம், காலத்தில், “ஆனால், விட்டது, சிறந்த, வந்து, என்னை, அடிமைகள், சுதந்திர