வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 127
“இல்லை. நம்மிருவருக்குள்ளும் தனித்துவம் எதுவும் கிடையாது. நாம் ஒருவரை விட்டு ஒருவர் முன்னேற முடியாது.”
“லோபா! நீ என் மனத்திற்கு உற்சாகம் மட்டுமல்ல, உடலுக்குப் பலத்தையும் கொடுக்கிறாய். நான் இரவிலே மிகக் குறைவாகத்தான் தூங்குகிறேன். பகலில் பாடங்களை நான் உருப்போடுவதோடு, மற்றவர்களையும் உருப்போடச் செய்வதில் அன்ன ஆகாரங்களை மறந்துவிடுகிறேன். நீதான் என்னைப் பாடசாலையின் இருட்டறையிலிருந்து வெளியே இழுத்துவந்து, இந்த வனத்திற்கும் சோலைக்கும் கங்கையின் பெருக்கத்திற்கும் அழைத்துச் செல்கிறாய். இவைகள் எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றன. ஆனால், மூன்று வேதங்களையும் பிராமணர்களின் மற்றக் கலைகள் யாவற்றையும் மிக விரைவிலேயே கற்று முடித்துவிட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.”
“நீதான் இப்பொழுது கலைகளின் எல்லையை அடைந்து விட்டாயே! பிரவாஹன் கல்வியறிவில் தனக்குச் சமதையானவன் என்று தந்தையார் கூடச் சொல்கிறாரே.”
“அது எனக்குத் தெரியும். பிராமணர்களின் கல்வியில் நான் படிக்க வேண்டுவது இன்னும் அதிகமில்லை. ஆனால் கற்க வேண்டுவது பிராமணர்களின் கலைகளோடு முடிந்து விடுவதில்லை.”
“ஆம். இதைத்தான் நானும் உன்னிடம் சொல்ல வேண்டுமென்று நினைத்தேன். ஆனால், இன்னும் உன்னுடைய பாலஷ தண்டத்தை (மாணவர்கள் உபயோகிக்கும் ஒருவகைத்தடி)யும் இந்தப் பரட்டைத் தலையையும் விடப்
போவதில்லையா?”
“அதைப்பற்றிக் கவலைப்படாதே லோபா! இந்தப் பாலஷ தண்டத்தை விட்டுவிடப் போகிறேன். பதினாறு வருடங்களாக எண்ணெயே காணாத இந்த பரட்டைத் தலையில் நறுமணமுள்ள தைலங்களைத் தடவிக் கோதும் சுதந்திரம் உனக்குப் பூரணமாக உண்டு.”
“பிரவாஹன்! இந்த மாணவக் கும்பல் தலையைப் பரட்டையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற பலமான கட்டுப்பாடு ஏன் என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் நீ எனது இந்த அழகிய உதடுகளிலே முத்தமிடுவதை ஒருநாள் கூட நிறுத்தியதில்லையே!”
“ஏனெனில் அது குழந்தைப் பருவத்திலிருந்து வந்த பழக்கம்.”
“மற்ற குருகுலங்களில் வசிக்கும் மாணவர்கள் இந்தக் கடுமையான விரதங்களை அனுஷ்டித்து வருகிறார்களா?”
“நிர்ப்பந்தத்தின் பேரில் மரியாதையின் உயர்வைப் பெறுவதற்காக இவைகளையெல்லாம் அனுஷ்டிக்க வேண்டியிருக்கிறது. இல்லையெனில் யார் விரும்புகிறார்கள்? ஆனால் ஜனங்களோ, இதைப் பிராமணர்களின் கடினமான தவம் என்று கருதுகிறார்கள்.”
“குருகுல அரசனோ, தந்தையாருக்குத் தங்கமும், வெள்ளியும், அடிமைகளும், குதிரைகளும், ரதங்களும், கிராமங்களும் கூடக் கொடுக்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 127, புத்தகங்கள், பிராமணர்களின், கங்கை, பக்கம், நான், வால்காவிலிருந்து, தண்டத்தை, மாணவர்கள், பரட்டைத், இந்தப், பாலஷ, வேண்டும், சிறந்த, எனக்கு, வேண்டுவது, இன்னும்