வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 126
“அதெல்லாம் எனக்கு நினைவில்லை பிரவாஹன்! ஆனால் உன்னுடைய கைகளின் ஸ்பரிசத்தை என்னுடைய தோள்கள் அனுபவித்தன என்பதே எனக்குப் போதும்.”
“ஆனால் நீ வெட்கப்பட்டு வளைந்து நெளிந்தாய்.”
“மேலும் நீ எனது கைகளை உனது கரங்களால் பற்றிக் கொண்டாய். ஆனால் உன்னுடைய உதடுகள் அசைவற்றிருந்தன. அதைப் பார்த்து என் தாயார் என்ன சொன்னாள் தெரியுமா!”
“மாமியின் ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. மாமியை மறக்க முடியுமா? என் தாயார் என்னைக்கார்க்கிய மாமாவிடம் ஒப்படைத்து விட்டு வீட்டுக்குத் திரும்பிவிட்டாள். அன்று முதல் மாமியின் அன்புதான் எனது தாயை மறக்கும்படி செய்தது. அந்த மாமியை நான் எப்படி மறப்பேன்?” பிரவாஹனுடைய கண்களிலே கண்ணீர் பெருக்கெடுத்தது. லோபாவின் உதடுகளிலே முத்தமிட்டு,
“மாமியின் முகமண்டலமும் இப்படித்தான் இருந்தது லோபா. நாம் இருவரும் அடுத்தடுத்துப் படுத்திருப்போம். நீ நன்றாகத் தூங்கி விடுவாய். எத்தனையோ நாட்கள் நான் அதிகாலையில் விழித்திருக்கிறேன். ஆனால் மாமி வருவதைப் பார்த்து நான் வேண்டுமென்றே கண்களை மூடிக் கொள்வேன்.
மறுவிநாடி சப்தமின்றி மூச்சுக்காற்றுக் கூட படாதபடி மாமியின் உதடுகள் என் கன்னங்களை ஸ்பரிசிக்கும்-நான் கண்ணைத் திறப்பேன். ‘எழுந்திரு மகனே!’ என்று என்னை எழுப்பிவிட்டு உன் கன்னங்களிலே முத்தமிடுவாள். நீ உணர்ச்சியற்றுத் தூங்கிக் கொண்டிருப்பாய்.”
லோபாவின் கண்களிலும் கண்ணீர் நிறைந்தது. “நான் என் தாயாரைக் கூடச் சரியாகப் பார்த்துத் தெரிந்துகொள்ளக் கொடுத்து வைக்கவில்லை.” என்றாள்.
“லோபா! உனக்குப் பயமென்பதே தெரியாது. மேலும் எனது சகலமும் நீயே. மாமாவுக்குப் பயந்து எனது பாடங்களை உருப்போட்டுக் கொண்டிருக்கும் நான், அதில் களைப்படையும் போதெல்லாம் உன்னை நாடித்தான் வருவேன்.”
“உனக்காகத்தானே அந்தக் கும்பலில் சேர்ந்து உனக்குப் பக்கத்தில் நானும் உட்காருகிறேன்.”
“அது எனக்குத் தெரியும் லோபா! நான் எடுத்துக் கொள்ளும் சிரமத்தில் நீ பாதியாவது எடுத்துக்கொண்டால் மாமாவின் மாணவர்களில் முதன்மை ஸ்தானம் உனக்குத்தான்.”
“உன்னைவிட அல்ல” என்ற லோபா பிரவாஹனின் கண்களுக்குள்ளே கூர்ந்து நோக்கிக்கொண்டே,
“உன்னைவிட முன்னேற விரும்பவில்லை, பிரவாஹன்!”
____________________________________________________
* கார்க்க கோத்திரத்தைத் தோற்றுவித்தவன்-தலைவன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 126, நான், புத்தகங்கள், எனது, வால்காவிலிருந்து, பக்கம், கங்கை, லோபா, மாமியின், மாமியை, “மாமியின், லோபாவின், “உன்னைவிட, உனக்குப், தாயார், கண்ணீர், உதடுகள், எனக்குத், என்ன, அந்த, தெரியாது, எனக்கு, சிறந்த, உன்னுடைய, பிரவாஹன், பார்த்து