வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 119
“திருடர்களுக்கும் கொள்ளைக்காரர்களுக்கும் தான் இந்த மாதிரிப் பயம் ஏற்படும். ஜனாதிபதி திருடராகவோ கொள்ளைக்காரராகவோ இருப்பதில்லை. அவர் உண்மையிலேயே ஜனசமூகத்தின் புதல்வர்-ஜனங்களின் தலைவர். அந்த முறையில் அவர் நடந்து கொள்ளவும் செய்கிறார். ஆகையால் அவருக்கு எந்தப் பயமும் கிடையாது. ஆனால் தந்தையே, அரசன்-திருடன், ஜன
சமூகத்தின் அதிகாரத்தைப் பறித்துக் கொண்டவன். ஆகையால் அவன் எப்பொழுதும் பயந்து கொண்டே வாழ வேண்டியிருக்கிறது. அரசர்களுடைய அந்தப்புரம், அவனுடைய தங்கம், வெள்ளி, ரத்தினங்கள், அவனுடைய எண்ணற்ற அடிமைகள், அவன் அனுபவிக்கும் சகல சுகபோகங்கள் யாவும் அவனுடைய உழைப்பிலிருந்து கிடைத்ததல்ல. பிறருடைய உழைப்பைச் சுரண்டிப் பெற்றவை.”
“மகனே, இவைகளுக்கெல்லாம் நானேதான் பொறுப்பாளியா?”
“இல்லை, முற்றிலும் இல்லை. தங்களுடைய ஸ்தானத்திற்கு வந்தபின் நானும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்தக் குற்றங்களைச் செய்ய வேண்டித்தான் ஏற்படும். இதற்காக என் தந்தையை நான் குற்றவாளியாக்கமாட்டேன்.”
“நீ ஆட்சியைத் திரும்ப ஜனங்களிடமே ஒப்புவித்து விடுவது பற்றிப் பேசுகிறாய். அது நடக்கக்கூடிய காரியமா? ஜனங்களுடைய உழைப்பின் பலனை அபகரிப்பது, பாஞ்சாலத்து அரசன் திவோதாஸ் மாத்திரம் அன்று என்பதை நீ நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். சுரண்டுகிற தலைவர்களின் கூட்டத்திலே அவனும் ஒருவன். அவன் பெரியவனாயிருக்கலாம்; ஆனால் அவர்களுடைய கூட்டுச் சக்திக்கு முன்னே, அவன் ஒரு விட்டில் பூச்சி. பல பிரதேசங்களின் தலைவர்கள் அரச வம்சத்தைச் சேர்ந்த பெரிய சேனாதிபதிகள். இவர்களையெல்லாம் விட மிகப் பெரிய சுரண்டும் கூட்டம் புரோகிதக் கூட்டம்.”
“புரோகிதர்களுடைய சக்தியை நான் அறிவேன். அரசனுடைய மூத்த மகனுக்கன்றி மற்றவர்களுக்கு ராஜ பதவி கிடைப்பதில்லை. ஆகையால் அவர்கள் புரோகிதப் பதவியைக் கைப்பற்றிக் கொள்கின்றனர். என் தம்பி பிரதர்தனும் அவ்விதமே செய்யக்கூடும். இன்று அரசர்களுக்கும் புரோகிதர்களுக்குமிடையே சிம்மாசன பீடம், வேள்விப் பீடம் என்ற அளவில்தான் வேற்றுமை இருக்கிறது. ஆனால் யார் கண்டார்கள்! எதிர் காலத்தில் க்ஷத்திரியர்கள், பிராமணர்கள் என்ற தனித்தனி ஜாதிகளும், இரு பெரும் சக்திகளும் தோன்றி விடக்கூடும். மத்ரம், காந்தாரம் முதலிய ஜன சமூகத்தில் தர்ப்பையை ஏந்தியிருக்கும் கை, வாளையும் ஏந்தும். ஆனால், இந்தப் பாஞ்சாலத்திலே, தர்ப்பையை ஏந்துவது விஸ்வாமித்தரருடைய கரங்கள். வாளை ஏந்துவது வத்யரஷ்வபுத்திரன் திவோதாஸினுடைய கரங்கள். இங்கே ஜனங்கள் இப்போது மூன்று பிரிவாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றனர். தலைமைப் பதவியிலும் பிறருடைய உழைப்பைச் சுரண்டுவதிலும், கொள்வினை கொடுப்பினையிலும், பிறப்பினாலுங்கூட அரசர்களும் புரோகிதர்களும் ஒரே இனத்தவர்கள்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 119, புத்தகங்கள், அவன், பக்கம், கங்கை, ஆகையால், அவனுடைய, வால்காவிலிருந்து, பீடம், பெரிய, கூட்டம், தர்ப்பையை, கரங்கள், ஏந்துவது, நான், உழைப்பைச், விடுவார்கள், அவர், அரசன், சிறந்த, பிறருடைய, ஏற்படும்