வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 111
“ஆனால் என்ன?”
“சுதா, நான் கூறுவதற்காக மன்னிக்க வேண்டும். அங்கு மனிதர்கள் வசிக்கவில்லை!”
“மனிதர்கள் வசிக்கவில்லையா? அப்படியானால் அங்கு வசிப்பவர்கள் தேவர்களா அல்லது ராக்ஷஸர்களா?”
“நான் இவ்வளவுதான் கூறமுடியும். அங்கு மனிதர்கள் வசிக்கவில்லை.”
“நான் கோபம் கொள்ளமாட்டேன். தாங்கள் மனந்திறந்து கூறலாம். இவ்விதம் தாங்கள் எண்ணியதற்குக் காரணம்?”
“சுதா, நம்முடைய நஞ்சைகளிலே ஆண்களும் பெண்களுமாக இருநூறு பேர் வரை வேலை செய்வதை நீ பார்த்திருக்கிறாயல்லவா?”
“ஆம்.”
“அவர்கள் எனது நஞ்சையிலே வேலை செய்த பொழுதோ அல்லது என்னிடம் கூலி பெறும்பொழுதோ எனக்கு வணக்கம் செலுத்தியதை நீ பார்த்ததுண்டா?”
“இல்லை. அவர்கள் உங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களைப் போலவே
தோன்றினார்கள்.”
“ஆம்; இவர்களைத்தான் மனிதர்கள் என்று சொல்வது. அவர்கள் என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மத்ரர்கள் எல்லோரும் ஒரே குலத்தவர். கிழக்குப் பிரதேசத்தில் இந்த மனிதத் தன்மையைக் காண மனம் துடிக்கிறது. அங்கு அடிமைகள் இருக்கிறார்கள். எஜமானர்கள் இருக்கிறார்கள். ஆனால் மனிதர்களில்லை. உறவினர்களில்லை.”
“தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. சத்லஜ் நதியைக் கடந்து முக்கியமாக இந்த மத்ரப் பிரதேசத்திற்கு வந்த பிறகுதான் நான் மனிதர்களைப் பார்த்தேன்-மனிதத் தன்மையைக் கண்டேன். மனிதர்களுடன் வாழ்வதில் ஆனந்தமும் கர்வமும் அடைகிறேன். இது எனது பாக்கியம்.”
“குழந்தாய் சுதா! எனக்கும் பரம சந்தோஷம். என்னுடைய வார்த்தையை நீ பிழையாகக் கொள்ளவில்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் சமுதாயத்தின் மீது - அவரவர் தேசத்தின் மீது அன்பிருப்பது இயற்கையல்லவா?”
“ஆம்! உண்மைதான். ஆனால் அந்த அன்பு குறைகளை மறைக்கும் போர்வையாக இருக்கக் கூடாதல்லவா?”
“நான் பாஞ்சாலத்தில் யாத்திரை செய்யும்போது இதுபற்றி யோசித்தேன். இங்கு வந்ததும் பெரிய பெரிய பண்டிதர்களிடம் விவாதித்திருக்கிறேன். இந்தக் குறைகள் அங்கு தோன்றுவதற்குக் காரணமும் எனக்குத் தெரிய வந்தது. தெரிந்துமென்ன? நிவர்த்தியில்லை.”
“தங்களுக்குத் தோன்றிய காரணம் என்ன?”
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 111, அங்கு, புத்தகங்கள், மனிதர்கள், பக்கம், “ஆம், “நான், கங்கை, வால்காவிலிருந்து, மனிதத், சொல்வது, எனது, இருக்கிறார்கள், பெரிய, மீது, அவரவர், தன்மையைக், வேலை, சிறந்த, என்ன, நான், வசிக்கவில்லை, அல்லது, காரணம், தாங்கள், “சுதா