வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 105
வருணன் நாட்டியசாலையின் செல்லக் குழந்தை. வருடக்கணக்காகத் தங்கள் கணவர்களின் முக தரிசனத்தைகூடக் கிடைக்காதிருக்கும் ஆரிய மங்கையர், இந்த அழகிய நாட்டியக்காரனின் வாயிலிருந்து வரும் தங்கள் கணவன்மார்களுடைய கீழ்ச் செயல்களின் செய்தியைக் கேட்ட பிறகு,
அவைகள் உண்மைதான் என்று நம்பத் தொடங்கினர். ஒருவர் மாற்றி ஒருவராக இச்செய்தியை ஊரெங்கும் பரவச் செய்தனர். வருணன் ஒரு கவிஞனுங்கூட. அவன் கணவனைப் பிரிந்து விரகதாபத்தால் வாடும் ஆரியப் பெண்கள் அசுரப் பெண்களைச் சபிப்பதாகவும். சுமத்திரனுடைய ஆடம்பரமான சுயநல வாழ்க்கையை விவரித்தும் பாடிய அழகிய பாடல்கள், சௌவீரபுரப் பிரதேசத்தின் வீடுகள் தோறும் பாடப்பட்டன. கடைசியில் வருணன் கணவனைப் பிரிந்திருக்கும் ஆரிய மங்கையரை சிறு சிறு கோஷ்டியாக அவர்களின் கணவர்களிடம் அனுப்பினான். அவர்கள் தங்கள் நாயகர்களால் நிராகரிக்கப்பட்டுத் திரும்பிவந்தபோது, இங்குள்ள ஆரியர்களுடைய உணர்ச்சி பொங்க ஆரம்பித்தது. அவர்கள் சுமத்திரனைப் திரும்பி வந்து சேரும்படி சொல்லியனுப்பியும் அவன் மறுத்து விடவே அவனைச் சேனாதிபதி பதவியிலிருந்து தள்ளிவிட்டு அவனுக்குப் பதிலாக வருணனைத் தங்கள் சேனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தனர்.
வருணன் பெரிய சேனையேடு சுமத்திரனை எதிர்க்கத் தெற்கு நோக்கிப் பயணமானான். இவன் பெரும்படை திரட்டி வரும் விஷயம் எட்டியதும் சுமத்திரனது சேனையில் பிளவு ஏற்பட்டது. அவர்களில் அநேகர் தங்கள் ஆரியத்தன்மையற்ற செயல்களுக்காக உண்மையிலேயே வருந்தினர். தன்னைப் பின்பற்றும் சிலரை வைத்துக் கொண்டு வருணனை எதிர்த்தால் நிச்சயமாக வெற்றி கிடைக்காது என்பதைத் தெரிந்துகொண்ட
சுமத்திரன், நகரத்தை வருணனிடம் ஒப்படைத்துவிட்டுச் சௌவீரபுரத்திற்குத் திரும்பச் சம்மதித்தான். இந்த விதமான ஆரியர்கள் ஓர் அபாயகரமான பரீட்சையில் தேறிவிட்டனர். வருணன் அசுரர்களை ஒன்றும் தொந்தரவு செய்யவில்லை. ஏனெனில் அவர்கள் இப்பொழுது ஆயுதம் ஏந்திப் போர் செய்து கொண்டிருக்கவில்லை. ஆனால் அசுரர்களுடைய செல்வாக்கிலிருந்து ஆரியர்களைப் பிரித்துவைப்பதற்காக, நகரத்தில் ஒரு தனி ஆரியப் பகுதியை உண்டாக்கினான். மகரிஷி அங்கிரா காட்டிய வழியிலே காரியங்களைச் செய்யத்தொடங்கினான்.
____________________________________________________
* இன்றைக்கு 152 தலைமுறைகளுக்கு முந்திய ஆரியர்களின் கதை இது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 105, தங்கள், புத்தகங்கள், வருணன், வால்காவிலிருந்து, கங்கை, பக்கம், அவன், கணவனைப், ஆரியப், சிறு, வரும், ஆரிய, செய்து, கொண்டு, சிறந்த, அழகிய