வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 101
“எல்லாவற்றையும் விடப் பெரிய ஆபத்தும், தீங்குகளுக்கெல்லாம் வேராயிருப்பதும் அசுரர்களின் அரச பதவியும்-அதற்குத் துணையாயிருக்கும் புரோகிதப் பதவியுமே ஆகும். அசுர சமூகத்தில் ஜனங்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. அவர்களுடைய அரசன் சொல்வதை அப்படியே ஏற்று, அதன் படி நடக்க வேண்டுவதே தன்னுடைய கடமையென்று ஒவ்வொரு அசுரனும் கருதுகிறான். இவர்கள் செய்யும் காரியங்களின் பொறுப்பை மேலே தேவதைகளும், கீழே அரசனும் ஏற்றுக் கொள்வதாகவும், ஆகவே இவர்கள் தங்களுடைய சொந்தப் பொறுப்பில் எந்த விஷயத்தையும் வாயினால் சொல்லவோ அல்லது செய்யவோ அதிகாரம் கிடையாதென்றும், அவர்களுக்கு அவர்களுடைய புரோகிதர்கள் போதிக்கிறார்கள்.
அரசன் அசுரர்களுக்குப் பூமியின் மீதுள்ள கடவுளாய் இருக்கிறான். சௌவீர் சமூகத்தார் இந்திரப் பதவியை எடுத்துவிட்டதாக நான் கேள்விப் பட்ட பொழுது, பெரிதும் மகிழ்ச்சியடைந்தேன். அசுர குலத்து அரசனுக்குள்ள ஸ்தானம், ஆரிய குலத்து இந்திரனுக்குக் கிடைத்ததில்லை. ஜனங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சேனாதிபதி ஜனங்களின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு எவ்வித அதிகாரமும் கிடையாது, என்றாலும் இந்தப் பதவியிலும் ஆபத்திருந்தது. ஆரியர்களிலேயே சிலர், ஆரியர்களிடத்தும் அரச பதவி வழக்கத்தைப் புகுத்துவதற்கு, ஆரியர்கள் தங்கள் ஆரியத் தன்மையைக் காப்பாற்ற விரும்பினால், எந்த ஒரு மனிதனுக்கும் அவர்கள் மறந்துங்கூட அரச அதிகாரத்தைக் கொடுக்கக்கூடாது. அசுரர்களுடைய பழக்க வழக்கங்களிலும் அவர்களது சமூக நடவடிக்கைகளிலும் ஆரியர்களுக்கு மிகுந்த வெறுப்பு
இருக்கிறது என்பதை நான் அறிவேன். இருந்தாலும் ஆரியர்கள் ஓர் அரசனை அங்கீகரித்து ஆரிய சமூகத்தின் மீது அவன் ஆதிக்கம் செலுத்துவதற்கும் உட்படுவார்களானால் அவனைத் தொடர்ந்தே புரோகிதர்களும் உண்டாகி விடுவார்கள். அதோடு ஆரியத் தன்மை அழிந்து போய்விடும். ஜன சமூகத்தின் உழைப்பைக் கொண்டு அரசன் சகல போகங்களையும் அனுபவிப்பான்; தெய்வங்கள் பெயரையும் கடவுள் பெயரையும் சொல்லி ஜனங்கள் மௌனமாகக் கீழ்ப்படிந்து நடக்கும்படி செய்வதற்காகப் புரோகிதனுக்கு அரசன் லஞ்சம் கொடுத்து அவனைத் தனக்குப் பக்க பலமாக வைத்துக் கொள்வான். இவ்விதம் அரசனும் புரோகிதனும் சேர்ந்து ஜனங்களைத் தங்களுடைய நிரந்தர அடிமைகளாக்கி விடுவார்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 101, ஆரிய, புத்தகங்கள், அரசன், ரத்தத்தின், பக்கம், நான், எந்த, கங்கை, வால்காவிலிருந்து, குலத்து, மீது, தங்களுடைய, அரசனும், ஆதிக்கம், ஆரியர்கள், விடுவார்கள், பெயரையும், அவனைத், சமூகத்தின், ஆரியத், இவர்கள், அவர்களுடைய, தன்மையைக், ஆகையால், தன்மை, ஆகும், இந்தப், சமூகத்தில், கிடையாது, அதிகாரமும், அசுர, சிறந்த, குழந்தைகள்