அர்த்தமுள்ள இந்துமதம் - மரத்தைத் தண்ணீரில் போடு
குளிக்கும் அறைக்குள் போய் நின்று கொண்டு கோகுலக் கண்ணன் படத்தைத் தேடக்கூடாது. பூஜை அறைக்குள் `ஷவர்பாத்’ இல்லையே என்று வருந்தக் கூடாது.
தேர்வும் தெளிவும் சரியாக இருந்தால், ஞானம் சரியாகிவிடும்.
ஞானத்தண்ணீர் பெருகி ஓடினால், துன்ப மரங்கள் எளிமையாகி விடும்.
மாட்டி இருப்பது விலங்குதான் என்று தெரிந்து கொண்டு, நடக்க ஏன் முயல வேண்டும்?
“ஐயோ! நடக்கமுடியவில்லையே” என்று ஏன் அழ வேண்டும்?
ஒவ்வொரு மரமும் இடைவெளி விட்டு நிற்கும் தென்னந்தோப்பைப்போல இரண்டு சுகங்களுக்கிடையில் ஒரு துயரம் இருக்கிறது.
இரண்டு துயரங்களுக்கிடையே ஒரு சுகம் இருக்கிறது. இதுதான் லெளகீக வாழ்க்கை.
கல் குத்தினால் வலிக்கிறது. கண்ணாடி குத்தினால் ரத்தம் வருகிறது. கவனித்து மருந்து போட்டால் ஆறிவிடுகிறது. கவனிக்காமல் விட்டால் `ஸெப்டிக்’ ஆகிறது. கவனித்தும் `ஸெப்டிக்’ ஆனால் ஏதோ பூர்வ ஜென்ம பாபம் இருக்கிறது.
துன்பத்தின் கதை இத்தோடு முடிந்துவிடுகிறது.
ஜன்னலின் அளவைப் பொறுத்து காற்று வருகிறது.
ஜன்னல்கள் இல்லாத வீடு சுகாதாரத்தைக் கெடுக்கிறது.
அதுபோல், சூழ்நிலைகளைப் பொறுத்துத் துன்பம் வருகிறது; அந்தச் சூழ்நிலைகளை நீக்கிக்கொள்ளும் பொறுப்பு மனிதனுக்குத் தான் இருக்கிறது.
நம்மையறியாமல் வருவது நாம் அறியாமலே தீர்க்கப்படுகிறது.
நாம் அறிந்து வருவதை நாமே தீர்த்துவிட முடியும்.
இந்த இரண்டுவகைத் துன்பங்களில், முதல்வகை ஈஸ்வர பக்தியால் விலகுகிறது.
இரண்டாவது வகை, கூரிய புத்தியால் விலகுகிறது.
பக்தியும் இல்லாமல் புத்தியும் இல்லாமல், `ஐயோ அம்மா’ என்று அலறுவதில் என்ன பொருள்?
பசுவை வாங்கி வந்தால் பால் கறக்கலாம்; காளையை வாங்கிவிட்டுக் கடவுள்மீது குறை சொல்வதில் என்ன அர்த்தம்?
காரணத்தோடு வரும் துன்பங்களை, விவேகத்தோடு சமாளிக்க வேண்டும்.
குடித்துவிட்டுக் காரோட்டி விபத்திற்குள்ளானால் அது காரணத்தோடு வரும் துன்பம்.
ரயில் விபத்தில் நீ சிக்கிக்கொண்டால், அது காரணமில்லாமல் வரும் துன்பம்.
முன்னதை நீ தடுக்கலாம்; பின்னதைக் கடவுள் தான் தடுக்க வேண்டும்.
இரண்டுக்கும் `ஞானம்’ என்றுதான் பெயர்.
சம்பாதிப்பது போதவில்லை என்றால் அது ஒருவகைத் துன்பம். நிறையச் சம்பாதித்தும் போதவில்லை என்றால் அது ஒருவகைத் துன்பம். சம்பாத்தியமே இல்லை என்றால் அது ஒருவகைத் துன்பம்.
எது உன் வாழ்க்கையில் நேர்ந்தாலும், அதன் மறுபகுதி துன்பம்.
தலையில் கை வைத்துக்கொண்டு தடுமாறுகிறவனுக்குத் துன்பம் தீராது.
ஞானம் என்ற தண்ணீரில் துன்பத்தை அமுக்கி இழுத்தால் பாரம் குறையும்.
நம்மைப் பிறக்க வைத்தபோது, தாய் பட்டது துன்பம்;
தாய் இறந்துபோனால் உறவினர் படப்போவது துன்பம்; இரண்டுக்கும் இடையிலே நாம் அனுபவிப்பது துன்பம்.
எல்லாவற்றுக்கும் பரிகாரம் மனதை ஞானத்தண்ணீரில் முக்கி எடுப்பதே.
வாழ்க்கையில் எந்தப் படிக்கட்டில் துன்பம் இல்லை?
பணம் இல்லை என்றால் துன்பம்.
அதிகம் சேர்ந்துவிட்டால் வருமான வரித்துன்பம்.
வடதுருவத்திற்குப் போனாலும் பனிக்கட்டிதான்; தென் துருவத்திற்குப் போனாலும் பனிக் கட்டிதான்.
`துன்பம் ஒரு சோதனை’ என்று முன்பே நான் எழுதி இருக்கிறேன்.
துக்கச் சுமையைக் குறைக்கக் காஞ்சிப் பெரியவர்கள் சொன்ன உதாரணம் என்னை மெய்சிலிர்க்க வைத்ததால், இதனை மீண்டும் எழுதுகிறேன்.
`ராமன் கிடைப்பானா?’ என்று கலங்கிய சீதை;
அவன் கிடைத்த பின்னாலும் காடு சென்று கலங்கிய சீதை;
காட்டிலும் ஒருவனால் தூக்கிச் செல்லப்பட்டுக் கலங்கிய சீதை;
அவனைக் காணாமல் தினந்தினமும் கலங்கிய சீதை;
வந்து தன்னை மீட்டதும் அவனால் சந்தேகிக்கப் பட்ட சீதை!
சீதையின் வாழ்க்கையிலே ஒரு சுவடுக்கு மறுசுவடு துன்பம் என்றால், என் நிலையும் உன் நிலையும் என்ன?
காட்டில் முளைத்த மரமும் கவலையுறும் காலம் இலையுதிர் காலம்.
ஆற்று மணலும், கவலைப்படும் காலம், கோடைக் காலம்.
பகுத்தறிவற்ற விலங்குகளும் கவலைப்படும் காலம், அவை பயப்படும் காலம்.
இவற்றுக்கெல்லாம் யார் ஆறுதல் கூறப்போனார்கள்?
மானிட ஜாதி ஆறுதல் தேடுகிறது.
திடீரென்று கேரளாவில் இருந்தொருவர் `ட்ரங்கால்’ போட்டுத் தம் துன்பங்களைச் சொல்லி என்னிடம் ஆறுதல் கேட்கிறார்.
அதையே அவர் பக்கத்து வீட்டுக்காரனிடம் சொன்னால், அவன் தன் துன்பங்களைச் சொல்வான்; அதுவே ஆறுதலாகி விடும்.
மறுபடியும் தொடக்கத்தைச் சொல்லி முடிக்கிறேன்.
மரங்களைத் தண்ணீரில் போட்டு இழுப்பது போல், துக்கங்களை ஞானத்திலும் நிதானத்திலும் இழுத்துப் பாருங்கள்.
அப்போதும் அது குறையவில்லையென்றால், துக்கப்படுவதையே வாழ்க்கையாக்கிக் கொள்ளுங்கள்; வேறென்ன செய்வது?
தேடல் தொடர்பான தகவல்கள்:
அர்த்தமுள்ள இந்துமதம் - மரத்தைத் தண்ணீரில் போடு, துன்பம், காலம், புத்தகங்கள், சீதை, என்றால், தண்ணீரில், இருக்கிறது, கலங்கிய, வேண்டும், அர்த்தமுள்ள, இந்துமதம், என்ன, நாம், மரத்தைத், வருகிறது, ஒருவகைத், போடு, வரும், ஆறுதல், இல்லை, தாய், வாழ்க்கையில், அவன், சொல்லி, துன்பங்களைச், கவலைப்படும், நிலையும், போனாலும், விலகுகிறது, விடும், மரமும், ஞானம், கொண்டு, சிறந்த, அறைக்குள், இரண்டு, குத்தினால், காரணத்தோடு, இரண்டுக்கும், இல்லாமல், தான், `ஸெப்டிக்&, போதவில்லை