அர்த்தமுள்ள இந்துமதம் - சோதனையும் வேதனையும்
`பெற்றோர்தான் பெண் தேடித்தர வேண்டும்’ என்று நான் சொன்னதை ஒப்புக் கொண்டே அவர், தாயும் தகப்பனும் வேறு வேறு பெண்ணைப் பார்த்தால் என்ன செய்வது என்று கேட்கிறார்.
அப்போது விஷயத்தைப் `புல் பெஞ்சு’க்கு விட்டுவிட வேண்டும். அதாவது, இருவரும் ஒரு நீதிபதியாக அமர்ந்து விடவேண்டும்.
எந்தப் பெண்ணுக்கு இவருடைய `ஓட்டு’ விழுகிறதோ அந்தப் பெண்ணுக்கு இரண்டு ஓட்டு விழுந்துவிட்டதாக அர்த்தம்.
மெஜாரிடியை நம்புகிற ஜனநாயகத்தில், இத்தகைய முடிவுதான் சரியானது.
பொதுவில் தங்களது காதல் துயரங்களையும் வேறு பல துயரங்களையும் ரசிகர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.
“நான் கடவுளை மனதார நம்புகிறேன். எனினும் எனக்கு துயரத்தின் மேல் துயரம் வருகிறதே என்ன செய்ய?” என்று தஞ்சாவூரிலுள்ள ஒருவர் கேட்கிறார்.
எப்போது நமக்குத் துயரம் தொடர்ந்து வருகிறதோ அப்போதே நாம் இறைவனின் பார்வைக்கு இலக்காகி இருக்கிறோம் என்றுதான் அர்த்தம்.
வாரியார் சுவாமிகளும் அதைத்தான் கூறினார்.
சோதனை அதிகமாக இருந்தால் சுகம் பெரிய அளவில் வரப்போகிறது என்று அர்த்தம்.
உண்மையான பக்தனைத்தான் இறைவன் சோதிக்கிறான்.
திருடர்களை அவர்கள் இஷ்டம்போல போகவிட்டுத் தண்டனைக்கு ஆளாக்குகிறான்.
பக்தர்களைப் பரமன் சோதித்து, இறுதியில் சிறந்த அருள் வழங்கியதாக நமது புராணங்களில் உள்ளன.
முதலில், சோதனைகளாலே மனம் மரத்துப் போய்ப் பக்குவம் பெற்று விடுகிறது.
பக்குவம் வந்தபின் கைக்கு வரும் எந்த லாபமும் தலைமுறைக்குத் தொடர்ந்து வருகிறது.
வீண் ஆரவாரங்கள், ஆர்ப்பாட்டங்கள் அடிபட்டுப் போய் நிதானம் வந்துவிடுவதால், பெரிய நன்மை வரும்போது ஆணவமோ அகந்தையோ வருவதில்லை; உள்ளம் அதை அமைதியாக வரவேற்கிறது.
சோதனைகளின் பலனாகக் கிடைத்த அடக்கமும் பணிவும் அதிகமாகின்றன.
சோதிக்கப்பட்ட மனிதன், பிறகு பலருடைய மரியாதைக்கும் உரியவனாகிறான்.
ஆகவேதான், நல்லவனை மிக நல்லவனாக்குவதற்கு வேதனைகளையும், சோதனைகளையும் இறைவன் தொடர்ந்து வழங்குகிறான்.
நண்பா, வருகின்ற சோதனைகளையெல்லாம் தாங்கிப் பார்க்க வேண்டும்.
ராசி மாறும்போது, ஜாதகத்தின் நல்ல நேரம் தோன்றும்போது, அதன் பலன் தெரியும்.
“நிழலருமை வெய்யிலிலே
நின்றறிமின் ஈசன்
கழலருமை வெவ்வினையில்
காண்மின்”
என்றார்கள்.
வீழ்ந்தவன் வீழ்ந்துகொண்டே இருந்து, வாழ்ந்தவன் வாழ்ந்து கொண்டே இருந்தால், இறைவனின் இயக்கம் சரிவர இயங்கவில்லை என்று பொருள்.
ஆனால் வீழ்ந்தவனுக்கு எழுச்சியையும், எழுந்தவனுக்கு வீழ்ச்சியையும் மாறி மாறி நான் காண்கிறேன்.
இந்த எழுச்சியும் வீழ்ச்சியும்தான், இறைவன் இயங்கிக் கொண்டிருக்கிறான் என்பதைக் குறிக்கின்றன.
பிறந்துவிட்ட ஒவ்வொரு மனிதன் ஜாதகமும் இறைவனாலே கணிக்கப்பெறுகிறது.
வேறு, வேறான பாதைகளும், வாதைகளும் இறைவனை நினைக்க வைக்கின்றன. மனிதனைப் பிரக்ஞையோடு வைத்திருப்பதற்குத்தான் இறைவன் ஒவ்வொருவருடைய விதியையும் மாற்றி மாற்றி அமைக்கிறான்.
விதியும் பூர்வஜென்மமும் ஒன்றோடொன்று தொடர்புடையவையாக இருப்பதற்குக் காரணமும் இதுதான்.
ஆகவே சிக்கல் நேரும்போதெல்லாம், `கண்ணா’ என்றோ, `கந்தா’ என்றோ ஒருமுறை அழைத்து, அதைத் தாங்கிக்கொண்டு அமைதியடைய வேண்டும்.
`துன்பம் வரும்போது சிரி; அதற்கு அடுத்தாற் போல வருவது துன்பமாக இருக்காது’ என்று வள்ளுவன் அறுதியிட்டுக் கூறினான்.
இந்துமதம் வேரூன்றியுள்ள இந்தியாவில் காலநிலையின் மாறுபாட்டுக் கணிதத்தை நாம் பார்க்கிறோம் அல்லவா?
கோடைக்கால வெயிலால் காய்ந்துபோன ஏரிகள் மாரிக்கால மழையால் மறுபடியும் நிரம்பவில்லையா?
“காலம் ஒருநாள் மாறும் நம்
கவலைகள் யாவும் தீரும்!”
என் வாழ்க்கையிலேகூடப் பல நேரங்களில், துன்பம் தாங்காமல் தற்கொலையைப் பற்றி நான் சிந்தித்ததுண்டு.
அது நடக்காமற் போனதற்குக் காரணம், என்னாலும் `ஏதோ ஆகும்’ என்று இறைவன் எழுதியிருப்பதுதான்.
பலமுறை தற்கொலைக்கு முயன்ற ராபர்ட் கிளைவ், இந்தியாவையே ஆளக்கூடியவனாக வந்து சேரவில்லையா?
பாழும் மனது சில நேரங்களில் சஞ்சலிக்கும்.
`போதுமே, இந்தக் கஷ்டம்’ என்று தோன்றும்.
`போய்ச் சேர்ந்துவிடலாம் அவனிடம்’ என்று எண்ணும்.
குழம்பும், புலம்பும், தவிக்கும், தத்தளிக்கும்; நன்மை கிடைத்தவுடன் `வாழ்ந்து பார்க்கலாம்’ என்ற சபலம் வரும்.
அது அதிகமாகும்போது, வாழ்க்கையைப் பற்றிய நம்பிக்கையும் வந்துவிடும்.
அந்த நம்பிக்கையிலேதான் நண்பா சோதனைகளைத் தாங்கிக் கொள்ளவேண்டும்.
இறைவன் யாரையும் கைவிடமாட்டான்.
இது சத்தியம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அர்த்தமுள்ள இந்துமதம் - சோதனையும் வேதனையும், இறைவன், புத்தகங்கள், வேறு, இந்துமதம், நான், தொடர்ந்து, சோதனையும், வேண்டும், துயரம், அர்த்தமுள்ள, சிறந்த, அர்த்தம், வேதனையும், நண்பா, நன்மை, வரும்போது, மனிதன், என்றோ, நேரங்களில், வரும், மாற்றி, மாறி, துயரங்களையும், கேட்கிறார், என்ன, கொண்டே, பெண்ணுக்கு, நாம், பெரிய, இருந்தால், இறைவனின், பக்குவம்