திருமுருகாற்றுப்படை - பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படை பாட்டின் இறுதியில் முருகப்பெருமானின் சிறப்பினை உணர்த்தும் பாடல்களாக 10 வெண்பாக்கள் தனிப்பாடல்கள் என்னும் தலைப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றைப் பாடியவர் யார் என்று தெரியவில்லை.
தனிப் பாடல்கள்
குன்றம் எறிந்தாய்! குரைகடலில் சூர் தடிந்தாய்! புன் தலைய பூதப் பொரு படையாய்! - என்றும் இளையாய்! அழகியாய்! ஏறு ஊர்ந்தான் ஏறே! உளையாய்! என் உள்ளத்து உறை. |
1 |
வேல் வீசி மலையை (கிரவுஞ்ச மலை) அழித்தவனே!, அலைகடலில் (திருச்சீரலைவாய்) சூரபன்மன் என்பவனை வேலால் வீழ்த்தியவனே!, பரட்டைத்தலைப் பூதப்படை கொண்டவனே!, என்றும் இளமைக் கோலத்துடன் இருப்பவனே!, என்றும் அழகின் திருவுருவமாகத் திகழ்பவனே!, காளை ஊர்தி சிவபெருமான் மகனாகிய காளையே!, என்றும் என் அருகில் இருப்பவனே!, என் நினைவிலும் நிலைகொள்வாயாக!.
குன்றம் எறிந்ததுவும், குன்றப் போர் செய்ததுவும், அன்று அங்கு அமரர் இடர் தீர்த்ததுவும், - இன்று என்னைக் கைவிடா நின்றதுவும், கற்பொதும்பில் காத்ததுவும், மெய் விடா வீரன் கை வேல்! |
2 |
குன்றம் எறிந்தது எது?, பகை அழியப் போரிட்டது எது?, தேவர்களின் துன்பத்தைத் தீர்த்தது எது?, இன்று என்னைக் கைவிடாமல் நின்றது எது?, கல்லுக் குகையில் அடைக்கப்பட்டிருந்த என்னைக் காப்பாற்றியது எது?, என் உடலைப் பற்றிநிற்கும் வேலனின் கைவேல் அன்றோ?.
வீர வேல், தாரை வேல், விண்ணோர் சிறை மீட்ட தீர வேல், செவ்வேள் திருக் கை வேல், - வாரி குளித்த வேல், கொற்ற வேல், சூர் மார்பும் குன்றும் துளைத்த வேல் உண்டே துணை. |
3 |
செவ்வேளின் கையிலுள்ள வேல், வீரம் மிக்க வேல், மழைத்தாரை போல் பொழியும் வேல், தேவர்களைச் சிறையிலிருந்து மீட்ட தீரம் மிக்க வேல், கடலில் குளித்துத் தன் கறையைப் போக்கிக்கொண்ட வேல், சூரன் மார்பையும், கிரவுஞ்சமலைக் குன்றையும் துளைத்த வேல், அது நமக்குத் துணையாக இருக்கும்போது அச்சம் இல்லை.
இன்னம் ஒரு கால், எனது இடும்பைக் குன்றுக்கும், கொல் நவில் வேல் சூர் தடிந்த கொற்றவா! - முன்னம் பனி வேய் நெடுங் குன்றம் பட்டு உருவத் தொட்ட தனி வேலை வாங்கத் தகும். |
4 |
வேலால் சூரபனமனை வீழ்த்திய கொற்றவனே, முன்பு பனிபடர்ந்த கிரவுஞ்சமலைக் குன்றத்தில் ஊடுருவிச் செல்ல வேல் வீசினாய், அந்தத் தனிவேலை என் துன்பமாகிய குன்றை அழிக்க இன்னும் ஒருமுறை வீச ஓங்கினால் அது தகுதி மிக்க செயலாகும்.
உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்; பின்னை ஒருவரை யான் பின்செல்லேன்-பன்னிரு கைக் கோலப்பா! வானோர் கொடிய வினை தீர்த்தருளும் வேலப்பா! செந்தி வாழ்வே! |
5 |
உன்னைத் தவிர வேறு யாரையும் நம்பமாட்டேன். பிற்காலத்திலும் உன்னை விட்டுவிட்டு வேறொருவர் பின்னே செல்லமாட்டேன். பன்னிருகைக் கோல அழகினைக் கொண்டவனே, வானோர்க்குச் செய்த கொடுமையைத் தீர்க்கும் வேலை உடையவனே, செந்தில் (திருச்செந்தூர்) வாழ்வே, நீயே துணை
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமுருகாற்றுப்படை - பத்துப்பாட்டு, வேல், திருமுருகாற்றுப்படை, குன்றம், என்றும், இலக்கியங்கள், என்னைக், மிக்க, பத்துப்பாட்டு, சூர், கிரவுஞ்சமலைக், உன்னை, துணை, வாழ்வே, வேலை, இருப்பவனே, வேலால், சங்க, கொண்டவனே, இன்று, மீட்ட, துளைத்த