சிறுபாணாற்றுப்படை - பத்துப்பாட்டு
னோங்குநிலை யொட்டகந் துயுன்மடிந் தன்ன வீங்குதிரை கொணர்ந்த விரைமர விறகிற் |
155 |
கரும்புகைச் செந்தீ மாட்டிப் பெருந்தோண் மதியேக் கறூஉம் மாசறு திருமுகத்து நுதிவே னோக்கி னுளைமக ளரித்த பழம்படு தேறல் பரதவர் மடுப்பக் கிளைமலர்ப் படப்பைக் கிடங்கிற் கோமான். |
160 |
தளையவிழ் தெரியற் றகையோற் பாடி யறற்குழற் பாணி தூங்கி யவரொடு வறற்குழற் சூட்டின் வயின்வயிற் பெறுகுவிர் |
நுளைமகள் என்பவள் மீனவப் பெண். அவள் ஒட்டகம் தூங்கி எழுந்தது போல் வரும் அலைகள் கொண்டு வந்த மணம் கமழும் விறகுகளைக் கொண்டு சமைப்பாள். கரும்புகையும் செந்தீயும் கமகமக்கச் சமைப்பாள். அவள் பருத்த தோளழகு உடையவள். வானத்து நிலா இவள் முகத்தைப் பார்த்துத் தனக்கு இப்படிப்பட்ட அழகு இல்லையே என ஏங்கும் முக அழகினைக் கொண்டவள். அதில் வேலின் கூர்மை போல் நோக்கும் கண்பார்வை கொண்டவள்.
சமைக்கும்போது பருத்த தோள்களைக் கொண்ட அவள் முகத்தைக் கரும்புகை கவ்வும். என்றாலும் கொழுந்து விட்டு எரியும் செந்தீ அவளது முகத்துக்கு ஒளி உண்டாக்கும். இந்த முக அழகைப் பார்க்க வானத்திலுள்ள மதியம் ஏங்கிக் கிடக்கும். காரணம் அவள் முகத்தில் கூர்மையான வேல் போன்ற கண்கள் இருந்தன. ( வானத்து மதிக்கு மேகம் புகை. விண்மீன் நெருப்புக் கட்டிகள் நிலாவுக்கு வெளிச்சம் தரும் நெருப்புத் தணலின் கட்டிகள். )
அவள் பழமைப்பட்டு நுரைத்து வரும் தேறலைப் பரதவர்களுக்குத் தருவாள். அப்போது நீங்கள் கிடங்கில் கோமானைப் பாடவேண்டும். ஒருவர் குழல் ஊதுகையில் மற்றவர் அவன் புகழைப் பாடவேண்டும். தன் அரசனின் புகழ் கேட்டு உங்களுக்கும் அரியல் தேறல் தருவாள். பரதவர்களோடு சேர்ந்து உங்களையும் உண்ணுமாறு செய்வாள். அத்துடன் கருவாட்டையும் சுட்டுத் தருவாள். இந்த விருந்தினை நீங்கள் ஆங்காங்கே பெறுவீர்கள். கிடங்கில் என்பது இப்போதுள்ள திண்டிவனம். கிடங்கில் கோமான் என்பவன் நல்லியக்கோடன். எயில்பட்டினம் அவன் நாட்டுத் துறைமுகம். உண்டபின் அவர்களோடு சேர்ந்து நீங்களும் கிடங்கின் கோமகனாகிய நல்லியக் காடனைப் பாடுங்கள். குழல் ஊதுங்கள். அவன் கட்டவிழும் பூமாலை அணிந்திருப்பதைப் பாடுங்கள்.
வேலூர் வளமும் எயினர் விருந்தும்
பைந்நனை யவரை பவழங் கோப்பவுங் கருநனைக் காயாக் கணமயி லவிழவுங் |
165 |
கொழுங்கொடி முசுண்டை கொட்டங் கொள்ளவுஞ் செழுங்குலைக் காந்தள் கைவிரல் பூப்பவுங் கொல்லை நெடுவழிக் கோப மூரவு முல்லை சான்ற முல்லையம் புறவின் விடர்கா லருவி வியன்மலை மூழ்கிச் |
170 |
சுடர்கான் மாறிய செவ்வி நோக்கித் திறல்வே னுதியிற் பூத்த கேணி விறல்வேல் வென்றி வேலூ ரெய்தி |
எயிற்பட்டினத்துக்குப் பின்னர் முல்லை நிலத்தைக் கடந்து வேலூர் செல்லவேண்டி வரும். இந்த வேலூர் நல்லியக்கோடனால் வேல் வீசி வெல்லப்பட்டது. இந்த வேல் வெற்றிவேல். மற்றொரு வேல் திறல்வேலாகிய கல்லுளி. கல்லுளியைக் கொண்டு கேணி வெட்டி வேலூர் மக்கள் தண்ணீர் பூக்கும்படி செய்தனர். கேணி தோண்டிய திறல்வேல், நல்லியக்கோடன் வெற்றி கொண்ட விறல்வேல் ஆகிய இரண்டு காரணங்களால் கடலூர் மாவட்டத்து வேலூர் (இக்காலத்தில் சிற்றூர்) வேலூர் என்னும் பெயரைப் பெற்றிருந்தது. வேலூர்ப் பகுதியை முல்லைநிலம் என்றும் பாடல் காட்டுகிறது.
வேலூரைச் சார்ந்த முல்லைநிலம் எப்படி யிருந்தது? அவரையில் பவளப்பூக்கள் பூத்தன. இளங்கொழுந்துள்ள அவரைக் கொடியில் செம்பவழம் பூத்துக் கிடப்பது போல் செந்நிற அவரைப்பூ பூத்துக்கிடக்கும். கருநீலக் காயாம்பூச்செடி ஆங்காங்கே மயில்கள் ஆடுவதுபோல் புதர்புதராகப் பூத்துக் கிடக்கும். முசுண்டைக் கீரை கொழுத்துச் சுருண்டு கிடக்கும். காந்தள் பூவின் குலை கைவிரல் போலப் பூத்துக் கிடக்கும். பயன்படுத்தப் படாத கொல்லைப்புறத்து வழிகளில் கோபம் என்று சொல்லப்படும் தம்பலப் பூச்சிகள் ஊர்ந்து சென்று கொண்டிருக்கும். அதுதான் முல்லைப் பூத்துக் கிடக்கும் முல்லைப் புறவு. அகன்ற மலைப்பிளவுகளில் காலூன்றி நடந்த அருவியின் நீர் முல்லை நிலத்துக்கு வந்து சேராமல் மலையிலேயே மூழ்கிப் போகும். . தெற்குப் பக்கம் இறங்கிச் சென்று கொண்டிருந்த சூரியன் தன் வழித்தடத்தை வடக்குப் பக்கமாகத் திருப்பி வந்துகொண்டிருந்த காலம் அது. ( உத்தராயணம் ) திறல் வேலால் கேணி தோண்டியும் ,விறல் வேலால் வெற்றி கண்டும் நல்லியக்கோடன் பெற்ற ஊர் வேலூர். அந்த வேலூரை அடைந்தால்…
னுறுவெயிற் குலைஇய வுருப்பவிர் குரம்பை யெயிற்றிய ரட்ட இன்புளி வெஞ்சோறு |
175 |
தேமா மேனிச் சில்வளை யாயமொ டாமான் சூட்டி னமைவரப் பெறுகுவிர் |
வேலூர்ப் பகுதியானது முல்லைவளம் திரிந்து பாலை நிலமாக மாறியிருக்கும். அந்த நிலப்பகுதி மக்கள் எயிற்றியரும் அங்கு வாழ்வதைக் காணலாம். கூரை வேயப்பட்டிருக்கும் அவர்களது குரம்பை வீடுகளில் உறுத்தும் வெயில் வாலைக் குலைத்துக் கொண்டு முற்றத்திலேயே முடங்கிக் கிடக்கும். வெயிலின் சினம் செல்லுபடி ஆகாத குரம்பை அது. அங்கே எயிற்றியர் நல்கும் இனிய புளிச்சோறு பெறலாம். காட்டில் மேயும் ஆமான் ஆட்டுக் கறி சுட்ட வறுவல் உணவும் பெறலாம். இனிய மாந்தளிர் போன்ற மேனியையுடைய உன் ஆயத்தாரும் பெறலாம். போதும்போதும் என்னும் அளவுக்கு விருப்பம் தீரப் பெறலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிறுபாணாற்றுப்படை - பத்துப்பாட்டு, வேலூர், கிடக்கும், அவள், பூத்துக், கொண்டு, வேல், பெறலாம், கேணி, இலக்கியங்கள், தருவாள், சிறுபாணாற்றுப்படை, அவன், வரும், குரம்பை, பத்துப்பாட்டு, முல்லை, நல்லியக்கோடன், கிடங்கில், போல், விறல்வேல், மக்கள், முல்லைநிலம், வேலால், அந்த, இனிய, முல்லைப், சென்று, என்னும், வேலூர்ப், கைவிரல், வெற்றி, குழல், பெறுகுவிர், சமைப்பாள், பருத்த, தூங்கி, தேறல், சங்க, செந்தீ, வானத்து, கொண்டவள், சேர்ந்து, ஆங்காங்கே, பாடுங்கள், பாடவேண்டும், நீங்கள், கொண்ட, கட்டிகள், காந்தள்