சிறுபாணாற்றுப்படை - பத்துப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
நூல்
வேனிற்காலம்
மணிமலைப் பணைத்தோள் மாநில மடந்தை யணிமுலைத் துயல்வரூஉ மாரம் போலச் செல்புன லுழந்த சேய்வரற் கான்யாற்றுக் கொல்கரை நறும்பொழிற் குயில்குடைந் துதிர்த்த புதுப்பூஞ் செம்மல் சூடிப் புடைநெறித்துக் |
5 |
கதுப்புவிரித் தன்ன காழக நுணங்கற லயிலுருப் பனைய வாகி யைதுநடந்து வெயிலுருப் புற்ற வெம்பரல் கிழிப்ப வேனி னின்ற வெம்பத வழிநாட் காலைஞா யிற்றுக் கதிர்கடா வுறுப்பப் |
10 |
பாலை நின்ற பாலை நெடுவழிச் |
வேனில் காலத்தில் காலை நேரத்தில் இளவெயில் காயும்போது பாலை நிலத்தில் சிறுபாணன் தன் சுற்றத்தாருடன் சென்றான். மாநில மடந்தைக்கு முலை மலை. ஆறு அவளது மார்பில் தொங்கும் ஆரம். ஆற்றங்கரையை உடைத்துக்கொண்டு நெடுந்தொலைவிலிருந்து வரும் காட்டாறு துன்புற்றுக் கொண்டிருந்தது. அதாவது நீர் இல்லாமல் வறண்டு போயிருந்தது. அந்த ஆற்றின் மணல் படிவுகள் நிலமடந்தைக்குக் கூந்தல். ஆற்றங்கரை மலர்ச் சோலைகளில் பூத்திருக்கும் மலர்களைக் குயில்கள் குடைந்து உண்ணும்போது உதிர்க்கும் பூக்கள் ஆற்றின் அறல் மணலைப் போர்த்திக் கிடந்தன. அந்தப் போர்வை மகளிர் இடுப்பில் அணியும் காழகம் ( = பாவாடை ) போல் சுருக்கம் சுருக்கமாகக் காணப்பட்டது. ( காற்றால் அறுபட்டுப் படிந்திருக்கும் மணல் படிவில் உதிர்ந்த பூக்கள் பாவாடை சுருக்கத்திற்கு உவமை. ) ஆற்றில் கிடக்கும் பருக்கைக் கற்கள் நடந்து செல்லும் பாணன் பாடினியரின் கால்களை உருத்தின, கிழித்தன. அவர்கள் மெல்ல மெல்ல நடந்து சென்றனர். அவர்களது நடை பார்ப்பவர்களுக்குச் சுவையாக இருந்தது. அது வேனில் காலம் வெயிலின் சூடுதான் வேனிலுக்குப் பதம். காலை ஞாயிறு தன் கதிர்ச்சுடரை வீசி வாட்டத் தொடங்கியது. பாலைநில வழியில் அவர்கள் சென்றனர்.
சுரன்முதன் மராஅத்த வரிநிழ லசைஇ |
அழகு மிக்க விறலியருடன் இளைப்பாறும் இரவலன்
யைதுவீ ழிகுபெய லழகுகொண் டருளி நெய்கனிந் திருளிய கதுப்பிற் கதுப்பென மணிவயின் கலாபம் பரப்பிப் பலவுடன் |
15 |
மயின்மயிற் குளிக்குஞ் சாயற் சாஅ யுயங்குநாய் நாவி னல்லெழி லசைஇ வயங்கிழை யுலறிய அடியி னடிதொடர்ந் தீர்ந்துநிலந் தோயு மிரும்பிடித் தடக்கையிற் சேர்ந்துடன் செறிந்த குறங்கிற் குறங்கென |
20 |
மால்வரை யொழுகிய வாழை வாழைப் பூவெனப் பொலிந்த ஓதி ஓதி நளிச்சினை வேங்கை நாண்மலர் நச்சிக் களிச்சுரும் பரற்றுஞ் சுணங்கிற் சுணங்குபிதிர்ந் தியாணர்க் கோங்கி னவிர்முகை யெள்ளிப் |
25 |
பூணகத் தொடுங்கிய வெம்முலை முலையென வண்கோட் பெண்ணை வளர்த்த நுங்கி னின்சே றிகுதரு மெயிற்றி னெயிறெனக் குல்லையம் புறவிற் குவிமுகை யவிழ்ந்த முல்லை சான்ற கற்பின் மெல்லியல் |
30 |
மடமா னோக்கின் வாணுதல் விறலியர் |
பாலை நெடுவழியில் முல்லை சான்ற கற்பினளாகிய பாணனின் மனைவியும் செல்கிறாள். பாலை நிலத்து மரங்களில் இலைகள் உதிர்ந்து விட்டன. அவற்றின் அடியில் வரி வரியாகக் கிடக்கும் அருநிழலில் ஆங்காங்கே உட்கார்ந்து இளைப்பாறிய பின் செல்கிறாள். அவளது கூந்தல், மேனியின் சாயல், உள்ளங்கால், காலின் தொடை, தலையில் போட்டிருக்கும் ஓதிக் கொண்டை, மேனியின் பொலிவைக் காட்டும் பொன்னிறத் தேமல், மார்பகப் பெண்பாலுறுப்பு, பல் ஆகிய உறுப்புக்கள் பொலிவுடன் பூத்துக் குலுங்குவதால் அவள் மாரிக் காலத்து மழைத்துளி பட்டவுடன் பூத்துக் குலுங்கி மணக்கும் குல்லை என்னும் குட்டிப் பிலாத்திப் புதர்ச்செடி போல் பொலிவு பெற்றிருக்கிறாள்.
கதுப்பு – அவளது கூந்தலில் எண்ணெய் கனிந்துள்ளது. அதுபோலத் தூறல் மழையில் நனைந்தாடும் மயிலின் தோற்றத்தைத் தருகிறது. சாயல் – மயில் தன் நீல நிறத் தோகையை விரித்துக்கொண்டு ஆடுவது போல் அவளது மேனியின் பொலிவழகு துவண்டு ஆடுகிறது. இவள் பெண்மயில். அது ஆண்மயில். எந்தச் சாயலழகு எந்தச் சாயலழகில் குளிக்கிறது என்று தெரியாத வியப்புநிலை அது. அடி – சாயல் நிழலில் இளைப்பு வாங்கும் நாயின் நாக்கைப் போல் அவளது உள்ளங்கால், அழகு, அமைப்பு, மென்மை போன்றவற்றால் அவளது அடியானது நாயின் நாக்கைப் போல் இருந்தாலும், அவளது காலில் மருதாணி பூசி மலர்ந்து போய் இழைக்கோடுகள் இருப்பதால் இவளது அடியின் பொலிவுக்கு நாயின் நாக்கு ஈடாகாது. குறங்கு – அவளது அடியிலிருந்து உயர்ந்து, பெண்யானையின் நிலத்தைத் தொடும் துதிக்கை போன்று அவளது தொடை இருக்கிறது. யானைக்குத் துதிக்கை ஒன்றுதான். இவளுக்கோ நெருக்கமான இரண்டு தொடைகள். ஓதி – அவளது தொடையைப் போல் மலைவாழைத் தண்டு இருக்கிறது. அந்த வாழையின் பூவைப்போல அவளது கொண்டை இருக்கிறது. சுணங்கு – அவள் கொண்டை பூத்திருக்கும் கொத்துக் கொத்தாக வேங்கை பூத்திருக்கிறது. வேங்கை பூத்திருப்பது போல் அவள் முலைமுகத்தில் சுணங்குத் தேமல் பூத்திருக்கிறது. தேன் உண்ட வண்டுகள் களிப்பினால் தேமலையும் பூ என்று மயங்கி மொய்த்துத் தேன் இல்லாத்தால் அரற்றி ஓலமிடுகின்றன. . முலை – அவளது தேமல் போல் கோங்கமரம் புதிய பூவை அவிழ்த்து வைத்திருக்கிறது. கோங்கம் பூ மொட்டுப் போல் அவளுக்கு முலை. பல் – அவளது முலையைப் போன்ற தேங்காயுடன் தென்னை நிமிர்ந்துள்ளது ( அவளது முலையைப் போன்ற காயுடன் பனை பருவம் கொண்டுள்ளது. ) தேங்காய்க்குள்ளே இருக்கும் தேங்காயைப் போல் அவளுக்குப் பல். ( பனை நுங்கு போல் பல் ) இனிமையாலும் ஈரத்தாலும் இளந் தேங்காயும், பனை நுங்கும் அவளது பல்லை ஒத்திருந்தன. குல்லை - அவளது பல்லைப் போல் குல்லை ( குட்டிப் பிலாத்தி ) பூத்திருக்கிறது. முல்லை = கற்பு – மாரியின் மழைத்துளிக்கு மட்டுமே பூக்கும் குல்லை போல் முல்லை பூத்திருக்கிறது. முல்லை என்னும் காத்திருக்கும் கற்புநெறி கொண்டவள் பாணன் மனைவியாகிய விறலி.
நடைமெலிந் தசைஇய நன்மென் சீறடி கல்லா விளையர் மெல்லத் தைவரப் பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பி னின்குரற் சீறியா ழிடவயிற் றழீஇ |
35 |
நைவளம் பழுநிய நயந்தெரி பாலை கைவல் பாண்மகன் கடனறிந் தியக்க வியங்கா வையத்து வள்ளியோர் நசைஇத் துனிகூ ரெவ்வமொடு துயராற்றுப் படுப்ப முனிவிகந் திருந்த முதுவா யிரவல! |
40 |
விறலியருக்கு மானைப்போல் மருண்டு பார்க்கும் கண் நடந்து நடந்து சோர்ந்து போயிருந்த அவர்களது சிறிய காலடிகளை இளைஞர்கள் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். மேலும் பாண்மகன் தனது சீறியாழை மீட்டிப் பாடியும் விறலியரை மகிழ்வித்துக் கொண்டிருந்தான். அந்த யாழை அவன் தன் இடப்பக்கத் தோளில் மாட்டிக் கொண்டு மீட்டி இசைத்தான். பாலைப் பண்ணில் நைவளத் திற இசையைக் கூட்டிப் பாடினான். அப் பண்ணை மீட்டுவதில் அவன் கைத்திறம் பெற்றவன். வையம் என்னும் உலக வண்டி நாம் இயக்க இயங்காத வண்டி. இந்த வையத்தில் வள்ளல்களைப் பார்க்கும் ஆசையில் பாணன் சென்று கொண்டிருந்தான். உள்ளத்தில் இருக்கும் சலிப்பும், உடலை வாட்டும் எவ்வமும் (துன்பமும்) துயரமாக மாறிப் பிறர் கொடுப்பதை ஏற்கும்படி அவனை ஆளாக்கி வழி நடத்திக் கொண்டிருந்தன..
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிறுபாணாற்றுப்படை - பத்துப்பாட்டு, அவளது, போல், பாலை, முல்லை, குல்லை, சிறுபாணாற்றுப்படை, பூத்திருக்கிறது, நடந்து, இலக்கியங்கள், பாணன், மேனியின், சாயல், அவள், இருக்கிறது, நாயின், என்னும், தேமல், கொண்டை, வேங்கை, முலை, அந்த, பத்துப்பாட்டு, எந்தச், அவன், நாட்டு, குட்டிப், வண்டி, தன்ன, மாநில, நாக்கைப், துதிக்கை, இருக்கும், பாண்மகன், பார்க்கும், முலையைப், தேன், சங்க, வேனில், கொண்டிருந்தான், காலை, சென்றனர், அவர்களது, லசைஇ, மெல்ல, பூத்திருக்கும், கிடக்கும், பூக்கள், அழகு, கூந்தல், உள்ளங்கால், தொடை, பாவாடை, ஆற்றின், செல்கிறாள், மணல், சான்ற, பூத்துக்