பொரும்பாணாற்றுப்படை - பத்துப்பாட்டு
குறிஞ்சி நில மக்களின் இயல்பும் தொழிலும்
யானை தாக்கினு மரவுமேற் செலினு நீனிற விசும்பின் வல்லேறு சிலைப்பினுஞ் |
135 |
சூன்மகள் மாறா மறம்பூண் வாழ்க்கை வலிக்கூட் டுணவின் வாட்குடிப் பிறந்த புலிப்போத் தன்ன புல்லணற் காளை சென்னா யன்ன கருவிற் சுற்றமொடு கேளா மன்னர் கடிபுலம் புக்க |
140 |
நாள்ஆ தந்து நறவுநொடை தொலைச்சி யில்லடு கள்ளின் றோப்பி பருகி மல்லல் மன்றத்து மதவிடை கெண்டி மடிவாய்த் தண்ணுமை நடுவட் சிலைப்பச் சிலைநவி லெறுழ்த்தோ ளோச்சி வலன்வளையூஉப் |
145 |
பகல்மகிழ் தூங்குந் தூங்கா விருக்கை முரண்டலை கழிந்த பின்றை மறிய |
அடுத்து மறவர் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டே செல்லலாம். மறவர்கள் தம் தாய் வயிற்றில் இருக்கும்போதே அஞ்சா நெஞ்ச மறம் படைத்தவர்கள். யானை தாக்க வந்தாலும், பாம்பு தன்மீது ஏறிச் சென்றாலும், மேக மூட்டம் இல்லாத வானில் இடி முழக்கம் கேட்டாலும் நிறை மாதத் தாய்மார்கூடக் கலங்குவதில்லை. (இடி இடிக்கும்போது கருப்பிணிகள் வெளியே வரக்கூடாது என்று இக்காலத்தில்கூடச் சொல்லப்படுகிறது.) (மேகமூட்டம் இல்லாத வானில் இடிமுழக்கம் கேட்டது பிக்பாங் தியரி ஒலியின் எச்ச மிச்சம் கேட்டிருக்குமோ என்று எண்ணிப் பார்க்கத் தூண்டுகிறது.) மறவர் வாட்குடியில் பிறந்தவர்கள். அது வலிகூட்டுண்ணும் வாட்குடி. உடல் வலிமையைக் கொண்டு உணவைப் பெறுவது வலிகூட்டுண்ணல். அவர்கள் இளந்தாடிக் காளையர். புலிக்குட்டியைப் போல வலிய போருக்குச் செல்வார்கள். செந்நாய் போலச் சுற்றத்தாரோடு கூட்டமாகச் செல்வார்கள். வலிமை மிக்க வில்லோடு செல்வார்கள். தன்னுடைய நாட்டு மன்னன் சொன்னதைக் கேளாத பகை மன்னன் காப்பாற்றிக் கொண்டிருக்கும் நாட்டுக்குச் செல்வார்கள். பட்டப் பகலில் அந்நாட்டுப் பசுக்கூட்டங்களைக் கவர்ந்து ஓட்டிக் கொண்டு வருவார்கள். தன் ஊருக்கு வந்ததும் நறவுக்கள் குடிப்பதற்காக அவற்றை விலையாகத் தருவார்கள். வீட்டுக்கு வந்து வீட்டிலே காய்ச்சிய தோப்பி என்னும் கள்ளைப் பருகுவார்கள். (நறவு = பழச்சாற்றிலிருந்து செய்யப்பட்ட கள். தோப்பி = சோற்றுக் கஞ்சியைப் புளிக்க வைத்துச் செய்த கள்.) பின்னர் மற்போர் புரியும் பொதுமன்றத்துக்கு வருவார்கள். தன் உடல் வலிமையைக் காட்டி மற்போர் புரிந்து விளையாடுவார்கள். அதில் சலிப்பு தோன்றும்போது கொழுத்த காளைகளைத் தூண்டி விட்டுத் தம் தோள் வலிமையைக் காட்டி அடக்கி விளையாடுவார்கள். காளையோடு விளையாடும்போது வாயை மடித்து வீளை (விசில்) அடிப்பார்கள். தண்ணுமை மேளத்தையும் அப்போது முழக்குவர். காளைகளை வளைத்து வென்றவண்ணம் நாள் முழுவதும் விளையாடுவார்கள். அங்குச் சோம்பிக் கிடந்து தூங்கி வழிபவர்கள் யாருமே இல்லாத்தால் அவர்களது இருப்பிடம் தூங்கா இருக்கையாகக் காணப்பட்டது. இப்படிப்பட்ட போர்பயிற்சிக் கூடத்தைப் (முரண் தலையைப்) பார்த்துக் கொண்டே செல்லலாம்.
கோவலர் குடியிருப்பு
குளகுஅரை யாத்த குறுங்காற் குரம்பைச் செற்றை வாயிற் செறிகழிக் கதவிற் கற்றை வேய்ந்த கழித்தலைச் சாம்பி |
150 |
னதளோன் றுஞ்சுங் காப்பி னுதள நெடுந்தாம்பு தொடுத்த குறுந்தறி முன்றிற் கொடுமுகத் துருவையொடு வெள்ளை சேக்கு மிடுமுள் வேலி யெருப்படு வரைப்பி னள்ளிருள் விடியற் புள்ளெழப் போகிப் |
155 |
முல்லைநிலத்தில் செல்லும்போது வழியில் இரவில் எங்கும் பாதுகாப்பாக உறங்கலாம். அதளோன், தோலை விரித்து அதன்மேல் உறங்குவான். அவன் துஞ்சும் காப்புதான் அந்தப் பாதுகாப்பான இடம். காப்பு என்பது கதவு உள்ள வீடு. அன்று, வீட்டுக்குத் தூணாக நடப்பட்ட உயரமில்லாத பந்தர்க்காலில் பசுந்தழைகள் கட்டப்பட்டிருந்தன. அது குரம்பை (கூரைவீடு) அதன் வாயில் கதவு தட்டைக்குச்சி போன்ற செத்தைகளையும் , மூங்கில் கழிகளையும் சேர்த்துக் கட்டிச் செய்யப்பட்டது. இந்தக் கதவை மூடிக்கொண்டு சாம்பின்மேல் (கட்டிலைப் போன்ற பரண்) தோலை விரித்து அதன்மேல் வீட்டுக்காரன் உறங்கினான். (அன்று அவன், நானும் அவ்வாறு உறங்க இடம் தந்தான். நீங்கள் சென்றால் உங்களுக்கும் தருவான்.) இந்த வீட்டுக்கு அப்பால் தொலைவிலுள்ள முற்றத்தில் ஆட்டுக்கிடை இருக்கும். மூங்கில் தட்டிகளைத் (தறிகள்) தாம்புக் கயிற்றால் கட்டிக் கிடையை அமைத்திருப்பார்கள். அதில் துருவை என்னும் செம்மறி ஆடுகளும், வெள்ளாடுகளும் அடைக்கப் பட்டிருக்கும். அதற்கும் அப்பால் வேலிப்பக்கத்தில் ஆட்டு எருக்களைக் கொட்டி வைத்திருப்பார்கள். பறவைகள் எழும்பிப் பறக்கும் விடியற் காலத்திலேயே இருள் இருக்கும் கருக்கல் நேரத்திலேயே எழுந்து இவற்றைத் தாண்டிச் செல்லவேண்டும்.
புலிக்குரன் மத்த மொலிப்ப வாங்கி யாம்பி வான்முகை யன்ன கூம்புமுகி ழுறையமை தீந்தயிர் கலக்கி நுரைதெரிந்து புகர்வாய்க் குழிசி பூஞ்சுமட் டிரீஇ நாண்மோர் மாறு நன்மா மேனிச் |
160 |
சிறுகுழை துயல்வருங் காதிற் பணைத்தோட் குறுநெறிக் கொண்ட கூந்த லாய்மக ளளைவிலை யுணவிற் கிளையுட னருத்தி நெய்விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளா ளெருமை நல்லான் கருநாகு பெறூஉ |
165 |
மடிவாய்க் கோவலர் குடிவயிற் சேப்பி னிருங்கிளை ஞெண்டின் சிறுபார்ப் பன்ன பசுந்தினை மூரல் பாலொடும் பெறுகுவிர் |
ஆயர் மகள் பால், மோரைக் குடும்பம் அருந்தி எஞ்சியதைக் காய்ச்சி வெண்ணெய், நெய் எடுத்து விற்று வரும் பணத்தைப் பொன்னாக வாங்காமல் கறவைக் கன்றுகள் வாங்கப் பயன்படுத்திக்கொள்வாள். ஆய்மகள் தரும் விருந்து - ஆய்மகள் காலையில் எழுந்ததும் மத்தால் தயிர் கடைவாள். தயிர் கடையும் ஓசை புலி உருமுவது போல் கேட்கும். நன்றாக உறைந்திருக்கும் தயிரைக் கடையும்போது காளான் வெள்ளை மொட்டை விரித்துக்கொண்டு பூப்பது போல நுரையிலிருந்து வெண்ணெய் திரண்டு வருகிறது. அன்று அந்த ஆய்மகள் நல்ல மாநிற மேனியுடன் காணப்பட்டாள். காதில் ஊசலாடும் குழை. பருத்த தோள். நெளிவுடன் படிந்திருக்கும் கூந்தல். தலையில் பூஞ்சுமட்டின் மேல் மோர்ப்பானை. வெண்ணெய் மிதக்கும் மோர்ப்பானை. அளை என்பது தயிர். தயிரில் விளைந்தது மோர். மோர் விற்று வந்த வருவாயைக் கொண்டு அவள் குடும்பம் நடத்துகிறாள். சேமிப்பு - வெண்ணெய் நெய் விற்றுவரும் பணத்தை அவள் அவ்வப்போது வாங்கிக் கொள்ளாமல் அவற்றை வாங்குவோரிடமே சேமித்து வைக்கிறாள். சேமித்த பணத்தை அவள் வாங்கிய போதும் அந்தப் பணத்தைக் கொண்டு பொன் அணிகளை அவள் வாங்குவது இல்லை. எருமைக் கன்றுகளும், பசுக் கன்றுகளும் வாங்குவாள். இவள் மடிவாய்க் கோவலர் குடியைச் சேர்ந்தவள். (பசு, எருமை போன்றவற்றின் பால்மடியைக் கொண்டு பிழைப்பவர் மடிவாய்க் கோவலர்) விருந்து - இவர்களது குடும்பத்தில் தங்கினால் நண்டுக்கண் போன்ற தினையரிசிச் சோற்றில் பால் ஊற்றித்தருவார்கள். விருந்துண்டு மேலும் செல்லலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பொரும்பாணாற்றுப்படை - பத்துப்பாட்டு, கொண்டு, வெண்ணெய், செல்வார்கள், அவள், இலக்கியங்கள், மடிவாய்க், வலிமையைக், பத்துப்பாட்டு, அன்று, விளையாடுவார்கள், செல்லலாம், தயிர், பொரும்பாணாற்றுப்படை, கோவலர், ஆய்மகள், அவன், மூங்கில், அந்தப், இடம், என்பது, அப்பால், கதவு, அதன்மேல், மோர்ப்பானை, மோர், பணத்தை, கன்றுகளும், விருந்து, விற்று, பால், குடும்பம், நெய், இருக்கும், தோள், கொண்டே, பார்த்துக், இல்லாத, வானில், உடல், மறவர், தூங்கா, சங்க, யானை, யன்ன, தண்ணுமை, மன்னன், வருவார்கள், அதில், வெள்ளை, விடியற், தோலை, காட்டி, மற்போர், அவற்றை, வீட்டுக்கு, தோப்பி, என்னும், விரித்து