நெடுநல்வாடை - பத்துப்பாட்டு
தலைவியின் வருத்த மிகுதி
நுண்சேறு வழித்த நோனிலைத் திரள்கால் ஊறா வறுமுலை கொளீஇய காறிருத்திப் புதுவ தியன்ற மெழுகுசெய் படமிசைத் திண்ணிலை மருப்பின் ஆடுதலை யாக |
160 |
விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து முரண்மிகு சிறப்பிற் செல்வனொடு நிலைஇய உரோகிணி நினைவனள் நோக்கி நெடிதுயிரா மாயிதழ் ஏந்திய மலிந்துவீழ் அரிப்பனி செவ்விரல் கடைக்கண் சேர்த்திச் சிலதெறியாப் |
165 |
புலம்பொடு வதியு நலங்கிளர் அரிவைக்கு |
அவளது படுக்கைக்கு மேலே விதானம் அமைக்கப்பட்டிருந்தது. அந்த மேல்கட்டியின் கால்கள் முலை வடிவு வேலைப்பாடுகளைக் கொண்டிருந்தது. மேல்கட்டித் துணியில் மெழுகு பூசப்பட்டு அதில் சந்திரன் உரோகினி என்னும் பெண்ணைத் தழுவும் ஓவியம் வரையப்பட்டிருந்தது. அந்த ஓவியத்தைப் பார்த்து அரசி பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தாள். அப்போது கடைக்கண்ணில் தோன்றிய கண்ணீர்த் துளியைத் தன் செவ்விய விரல்களால் துடைத்துத் தெரித்துக்கொண்டாள்.
இன்னா அரும்படர் தீர விறறந்து இன்னே முடிகதில் அம்ம மின்னவிர் |
அந்த அரிவைப்பெண் புலம்பிக்கொண்டு வாழ்கிறாள். அது துன்பம் தரும் நினைவோட்டம். அது தீரவேண்டும். அதற்கு வழி அவளது தலைவன் போரில் வெற்றி பெற வேண்டும். போர் இப்போதே முடியவேண்டும். – இது பாடலின் முடிவு.
பாசறையில் அரசன் நிலை
ஓடையொடு பொலிந்த வினைநவில் யானை நீள்திரள் தடக்கை நிலமிசைப் புரளக் |
170 |
களிறுகளம் படுத்த பெருஞ்செய் யாடவர் ஒளிறுவாள் விழுப்புண் காணிய புறம்போந்து வடந்தைத் தண்வளி எறிதொறும் நுடங்கித் தெற்கேர் பிறைஞ்சிய தலைய நற்பல் பாண்டில் விளக்கிற் பரூஉச்சுட ரழல |
175 |
வேம்புதலை யாத்த நோன்காழ் எஃகமொடு முன்னோன் முறைமுறை காட்டப் பின்னர் மணிபுறத் திட்ட மாத்தாட் பிடியொடு பருமங் களையாப் பாய்பரிக் கலிமா இருஞ்சேற்றுத் தெருவின் எறிதுளி விதிர்ப்பப |
180 |
புடைவீழ் அந்துகில் இடவயின் தழீஇ வாள்தோள் கோத்த வன்கட் காளை சுவல்மிசை யமைத்த கையன் முகனமர்ந்து நூல்கால் யாத்த மாலை வெண்குடை தவ்வென் றசைஇத் தாதுளி மறைப்ப |
185 |
நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான் சிலரொடு திரிதரும் வேந்தன் பலரொடு முரணிய பாசறைத் தொழிலே. |
யானை – மின்னி ஒளிரும் யானை ஓடை நெற்றியில் கொண்ட யானை, போர்த்தொழில் திறம் பெற்ற யானை, தன் கையை நிலத்தில் போட்டுக்கொண்டு புரளும்படி, பெருஞ்செய் ஆடவர் – பெருஞ்செய் என்பது போர்க்களம். யானை நிலத்தில் புரளும்படி போரிட்ட ஆடவர், யானையை வீழ்த்திய ஆடவர் வாள்-புண் பட்டுக் கிடப்பதைக் காண அரசன் வெளியே வந்தான். வடக்கிலிருந்து காற்று வீசும்போதெல்லாம் பாண்டில் விளக்கில் எரியும் சுடர் தெற்குப்பக்கமாக வணங்கியது. வேப்பந்தழை கட்டிய வேலுடன் அறிமுகம் செய்யும் முன்னோன் காட்டிக்கொண்டே முன்னே சென்றான். அரசன் பெருஞ்செய் ஆடவரைக் கண்டான். முதுகில் மணி தொங்கும் பெண்-யானைகளைக் கண்டான். இருக்கைப் பருமம் களையப்படாத குதிரைகளைக் கண்டான். சேறு பட்டுக் கிடந்த தெருவில் நடந்து கண்டான். விழும் பனித்துளியில் நனைந்துகொண்டே சென்று கண்டான். காற்றில் நழுவும் வேலாடையைத் தன் இடக்கையில் தழுவிக்கொண்டே சென்று கண்டான். வாளைத் தோளில் கோத்துக்கொண்டிருந்த மெய்க்காப்பாளனின் தோளில் கையை வைத்துக்கொண்டு சென்று கண்டான். ஆர்வம் தழுவிய முகத்துடன் கண்டான். நூல்-குஞ்சம் தொங்கும் அவனது வெண்கொற்றக்குடை வீசும் வாடைத்துளிகளை மறைத்து அங்குமிங்கும் அசைந்துகொண்டிருந்தது. அது நள்ளிரவு நேரம். அவன் தன் படுக்கையில் இல்லை. சிலரோடு திரிந்துகொண்டிருந்தான். இது அவன் பாசறைத் தொழில். இந்தப் பாசறைத்தொழில் உடனடியாக முற்றுப்பெற வேண்டும். ஆரிவையின் நினைவலைத் துன்பம் தீர முற்றுப்பெற வேண்டும். – இது பாடலின் முடிபு.
நெடுநல்வாடை முற்றும்.
தனிப் பாடல்
வாடை நலிய, வடிக் கண்ணாள் தோள் நசைஇ, ஓடை மழ களிற்றான் உள்ளான்கொல்- கோடல் முகையோடு அலமர, முற்று எரி போல் பொங்கி, பகையோடு பாசறை உளான்? |
வாடைக்காற்று துன்புறுத்திக்கொண்டிருக்கையில், அவள் அவன் தோளை விரும்பிக்கொண்டிருக்கையில், அவன் அவளை நினைக்க மாட்டானோ? கோடல் பூ எரியும் தீ போல் அல்லவா பூத்துக் கிடக்கிறது. பாசறையில் அல்லவா அவன் இருக்கிறான்.
*-*-*-*-*
தேடல் தொடர்பான தகவல்கள்:
நெடுநல்வாடை - பத்துப்பாட்டு, கண்டான், யானை, அவன், இலக்கியங்கள், பெருஞ்செய், நெடுநல்வாடை, பத்துப்பாட்டு, ஆடவர், சென்று, அரசன், வேண்டும், அந்த, போல், எரியும், பட்டுக், தொங்கும், கோடல், முற்றுப்பெற, தோளில், அல்லவா, யாத்த, துன்பம், அவளது, திரிதரும், சங்க, பாடலின், பாசறையில், நிலத்தில், கையை, பாசறைத், பாண்டில், புரளும்படி