திணைமாலை நூற்றைம்பது - பதினெண் கீழ்க்கணக்கு
விளரியாழ்ப் பாண்மகனே! வேண்டா அழையேல் முளரி மொழியாது உளரிக் - கிளரிநீ பூங்கண் வயலூரன் புத்தில் புகுவதன்முன் ஆங்கண் அறிய உரை. |
126 |
விளரியென்னும் பண்னைச் செய்கின்ற யாழையுடைய பாண்மகனே! யாங்கள் விரும்பாதன அழையா தொழிக; எங்கண்மாட்டு நினக்கு ஈரமல்லாத முளரி போன்ற மொழிகளைச் சொல்லாது இங்கு நின்றும் புடை பெயர்ந்து கிளர்ந்து நீ போய்த் தாமரைப் பூப் போன்ற கண்களையுடைய வயலூரன் இன்று புதுமனையின்கண்ணே புகுவதன்முன் அப்புதுமனைக்கண் நீ சென்று வாராநின்றான் என்று அவனாற் காதலிக்கப்பட்ட பரத்தையர்க்கு உரை.
மென்கண் கலிவய லூரன்தன் மெய்ம்மையை எங்கட்கு உரையாது எழுந்துபோய் - இங்கண் குலம்காரம் என்றுஅணுகான் கூடும்கூர்த்து அன்றே அலங்கார நல்லார்க்கு அறை. |
127 |
மெல்லிய இடத்தையுடைய மிக்க வயலூரனுடைய மெய்யுரைகளை எங்கட்குச் சொல்லாதே இங்கு நின்று மெழுந்து போய் இவ்வுலகத்தின்கட் குலமுடைய மனையாளைப் புணர்தல் புண்ணிற்கு இடுங் காரம் போன்று வெய்யதென்று தலைவன் கருதி யவர்களை நெருங்கானாய், பரத்தையரைப் புணர்தல் பால்போன் றினிக்கும் பண்புடையதெனக் கருதி அவர்களை விரும்பிக் கூடுமென்று, தம்மை யழகுபடுத்திக் கொள்வதா நன்மை யொன்றினையே கொண்டபரத்தையரக்குப் பகர்வாயாக.
செந்தா மரைப்பூ உற நிமிர்ந்த செந்நெல்லின் பைந்தார்ப் புனல்வாய்ப்பாய்ந்து ஆடுவாள் - அந்தார் வயந்தகம்போல் தோன்றும் வயலூரன் கேண்மை நயந்தகன்று ஆற்றாமை நன்று. |
128 |
செவ்விய தாமரை மலரோடு ஒன்றாக வளர்ந்து நிற்கின்ற செந்நெற் பயிரினது பசிய கதிர்க்குலைகளையுடைய யாற்று நீரினிடத்திலே குதித்து விளையாடுகின்ற பரத்தையினது அழகிய மார்மீதணிந்துள்ள மலர் மாலையின் வயப்பட்டு, அவளது மனம்போல வெளிப்பட்டு நடக்கும் மருத நிலத்துார்த்தலைவனது நட்பினின்றும் பகையின்றியே, விலகி துன்புற்று வாழ்தல் நல்லதாகும். (என்றுதலைவி தனக்குட்டானே கூறினாள்.)
வாடாத தாமரைமேல் செந்நெற் கதிர்வணக்கம் ஆடா அரங்கினுள் ஆடுவாள் - ஈடாய புல்லகம் ஏய்க்கும் புகழ்வயல் ஊரன்தன் நல்லகம் சேராமை நன்று. |
129 |
அப்பொழுது அலர்ந்த தாமரைப் பூவினிடத்தே செவ்விய நெற் கதிர்கள் வணங்கித் தங்கும்படியாக கூத்தியர் ஆடுதலில்லாத புனலிடமாகிய யாற்று நீரிலே நீர்குடைபவளாகிய பரத்தையினது சிறந்த பலரும் தழுவுதற்குரிய மார்பினை தழுவும் நலமிக்க மருத நிலத்துார்த் தலைவனது நல்ல மார்பினை தழுவாமை நல்லதாகும். (என்றுதலைவி தனக்குட்டானே கூறினாள்)
இசையுரைக்கும் என்செய் திரம்நின் றவரை வசையுரைப்பச் சால வழத்தீர் - பசைபொறை மெய்ம்மருட்டு ஒல்லா மிகுபுனல் ஊரன்தன் பொய்ம்மருட்டுப் பெற்ற பொழுது. |
130 |
அன்பு காரணமாக மேற்கொள்ளப்பட்ட உண்மையான போக்கினை கொண்டிராத மிக்க நீர்வளமிக்க மருத நிலத்துார்த்தலைவனது பொய்மையான மாய மொழிகளை கேட்டபோது என்பால் தலைவன் செய்யும் நிலையுடைக்காதற் செயல்களே அவனது புகழினை எடுத்துக் காட்டுவனவாகும் கூடல் கருதி நிற்பவராகிய தலைவரை (உங்களுடைய புகழ் மொழிகளே அவர்தம்) இகழினை எடுத்துக் காட்டும்படி மிகுதியும் போற்றிக் கூறாது நடவுங்கள். (என்று தலைவி வாயிலாகவந்தார்க்குக் கூறினாள்.)
தேடல் தொடர்பான தகவல்கள்:
திணைமாலை நூற்றைம்பது - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், வயலூரன், திணைமாலை, மருத, கூறினாள், கருதி, கீழ்க்கணக்கு, நூற்றைம்பது, பதினெண், நிலத்துார்த்தலைவனது, யாற்று, பரத்தையினது, நல்லதாகும், என்றுதலைவி, எடுத்துக், மார்பினை, ஊரன்தன், தனக்குட்டானே, செந்நெற், செவ்விய, இங்கு, புகுவதன்முன், சங்க, முளரி, தாமரைப், மிக்க, நன்று, ஆடுவாள், தலைவன், புணர்தல், பாண்மகனே