பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு
மாரி ஒன்று இன்றி வறந்திருந்த காலத்தும், பாரி மட மகள், பாண் மகற்கு, நீர் உலையுள் பொன், திறந்து, கொண்டு, புகாவாக நல்கினாள்;- ஒன்று உறா முன்றிலோ இல். |
381 |
மாரி ஒன்று இன்றி வறந்து இருந்த காலத்தும், மழையென்பதே ஒன்று இல்லாமல் வற்றியிருந்த காலத்திலும், பாரியினுடைய இளமை பொருந்திய மகள் வந்துஇரந்த பாணனுக்கு நீரையுடைய உலையுள் பொன்னைப் பெய்து அதனைக் கொண்டுவந்து உணவாகக் கொடுத்தாள்.(ஆதலால்) ஒரு பொருளும் இல்லாத வீடோ இல்லை.
கருத்து: ஒவ்வொருவரும் தம்மா லியன்றதொரு பொருளைக் கொடுக்க.
ஏற்றார்கட்கு எல்லாம் இசை நிற்ப, தாம் உடைய மாற்றார் கொடுத்திருப்ப, வள்ளன்மை; மாற்றாரை மண்ணகற்றிக் கொள்கிற்கும் ஆற்றலார்க்கு என் அரிதாம்?- பெண் பெற்றான் அஞ்சான், இழவு. |
382 |
இரந்தவர்கள் எல்லோருக்கும் புகழ் இவ்வுலகில் நிலைத்து நிற்குமாறு தம்மிடத்துள்ள பொருளை இல்லையென்று கூறாராகித் தம் அளவிற்கு ஏற்பக் கொடுப்பது கொடையாம் பகைவரை வென்று நாட்டை அவரினின்றும் நீக்கித் தன்னதாகக் கொள்ளும் வலிமை உடைய அரசர்களுக்குச் செய்தற்கரியது யாது? ஒரு பெண்ணைப் பெறத்தகும் காலத்தைப் பெற்றவன் இழக்கப்படும் பொருளுக்கு அஞ்சுவானல்லன் ஆதலால்
கருத்து: கொடைக்குரியவர்கள் அரசர்களே யாவர்.
பயன் நோக்காது, ஆற்றவும் பார்த்து அறிவு ஒன்று இன்றி, இசை நோக்கி, ஈகின்றார் ஈகை,-வயமாப்போல் ஆலித்துப் பாயும் அலை கடல் தண் சேர்ப்ப!- கூலிக்குச் செய்து உண்ணும் ஆறு. |
383 |
வெற்றியையுடைய குதிரையைப்போல் ஒலித்துத் தாவிச் செல்லும் அலைகடலையுடைய குளிர்ந்த நீர் நாடனே! மறுமையில் வரும் பயனை நோக்குதலின்றி மிகவும் பகுத்தறியும் அறிவு என்பது ஒன்று இல்லாதவராகி புகழொன்றனையே நோக்கி கொடுக்கின்றவர்களது ஈகை கூலிக்குத் தொழில் செய்து உண்ணு நெறியோ டொக்கும்.
கருத்து: புகழொன்றனையே நோக்கிக் கொள்வோர் நிலையறியாது கொடுக்கும் கொடை சிறந்ததன்றாம்.
மறாஅ தவனும், பலர் ஒன்று இரந்தால், பெறாஅஅன் பேதுறுதல் எண்ணி, பொறாஅன், கரந்து உள்ளதூஉம் மறைக்கும்; அதனால், இரந்து ஊட்குப் பன்மையோ தீது. |
384 |
மறுக்கும் இயல்பில்லாதவனும் இரவலர் பலரும் ஒரு பொருளை விரும்பினால் (எல்லோர்க்கும் கொடுக்க முடியாமையால்) அதனைப் பெறாதவன் மயக்கமுறுதலை நினைத்து மனம் பொறாதவனாகித் தன்னிடத்துள்ள பொருளையும் கரந்து மறைப்பான் ஆகையால் யாசித்து உண்ணும் உணவிற்கு ஒருவனிடத்திலே பலரும் சென்றிரத்தல் தீமையைத் தருவதாம்.
கருத்து: ஒருவனிடத்தில் : யாசிப்பதற்குப் பலரும் ஒன்று சேர்ந்து செல்லுதல் ஆகாது.
தோற்றம் பெரிய நசையினார், அந் நசை ஆற்றாதவரை அடைந்து ஒழுகல்,-ஆற்றுள் கயல் புரை உண்கண் கனங்குழாய்!-அஃதால், உயவுநெய்யுள் குளிக்குமாறு. |
385 |
ஆற்றின்கண் உள்ள மீனையொத்த மை யுண்ட கண்களையும் பொற் குழையினையுமுடையாய் தோன்றுதல் மிகுந்த ஆசையினை உடையவர்கள் அவ் வாசையைத் தீர்க்கமாட்டாதவர்களை தீர்ப்பாரெனக் கருதி அடைந்து அவர்வழி நிற்றலாகிய அதுவே வண்டிக் கிடும் மசையினுள் குளிக்கு மாற்றை யொக்கும்.
கருத்து: குறைதீர விரும்புவார் அதனைத் தீர்க்கவல்லாரைச் சார்ந்தொழுகுக.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, ஒன்று, கருத்து, இலக்கியங்கள், பலரும், பழமொழி, இன்றி, பதினெண், கீழ்க்கணக்கு, நானூறு, செய்து, அறிவு, நோக்கி, உண்ணும், பொருளை, கரந்து, புகழொன்றனையே, அடைந்து, உலையுள், காலத்தும், மாரி, சங்க, மகள், நீர், கொடுக்க, ஆதலால், உடைய