பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு
கோவாத சொல்லும் குணன் இலா மாக்களை நாவாய் அடக்கல் அரிது ஆகும்;-நாவாய் களிக்கள்போல் தூங்கும் கடல் சேர்ப்ப!-வாங்கி வளி தோட்கு இடுவாரோ இல். |
116 |
மரக்கலங்கள் கள்ளுண்டு ஆடும் களியர்போல ஆடுகின்ற கடல் நாடனே! காற்றினை ஒரு கொள்கலத்துள் வாங்கி தோள்களுக்கு இடவல்லார் உளரோ? இல்லை. (அதுபோல) பொருத்தமில்லாதவைகளைக் கூறும் நற்குணங்கள் ஒரு சிறிதும் இல்லாத விலங்கொப்பாரை நாவினிடத்து அடக்குதல் இல்லையாம்.
கருத்து: கீழ்மக்களின் நாவினை அடக்குதல் முடியாது.
தெரியாதார் சொல்லும் திறன் இன்மை தீதாப் பரியார், பயன் இன்மை செய்து, பெரியார் சொல் கொள்ளாது, தாம் தம்மைக் காவாதவர்,-பிறரைக் கள்ளராச் செய்குறு வார். |
117 |
(நன்மை தீமை) அறியாதார் கூறும் திறப்பாடில்லாச் செயல்களை தீதாக நினைத்து நீக்கார் அவர் கூறிய பயனற்ற செயல்களைச் செய்து அறிவிற் பெரியோர் கூறும் அறிவுரையை மனதுட்கொள்ளாது குற்றங்களினின்றும் தம்மைத்தாமே காத்துக்கொள்ள இயலாதவர்கள் தாம் செய்த குற்றத்தைக் கூறுகின்றவர்களை குற்றம் உடையவர்களாகச் செய்வார்கள்.
கருத்து:கீழ்மக்கள் தமது குற்றத்தை எடுத்துக் காட்டுபவர்களைக்குற்றவாளியாகச் செய்வார்கள்.
செய்த கொடுமை உடையான், அதன் பயம் எய்த உரையான், இடரினால்;-எய்தி மரிசாதியாய் இருந்த மன்று அஞ்சுவாற்குப் பரிகாரம் யாதொன்றும் இல். |
118 |
நீதிமான்கள் பலரும் திரண்டு இருந்த அவையினைக் கண்டு அஞ்சி உண்மையைக் கூறுகின்றவர்களுக்குச் செய்கின்றது யாதொன்றுமில்லை யாதலால் செய்த தீமையை உடையவன் பிறர் கேட்டவிடத்துக் கூறினால் வரும்அச்சம் தன்னை வந்தடைய அத்துன்பத்தால் கூறுவானல்லன்.
கருத்து: கீழ்மக்கள் உண்டாகும் துன்பத்திற் கஞ்சி நியாயசபையிலன்றி உண்மையைக் கூறமாட்டார்கள்.
முதுமக்கள் அன்றி, முனி தக்கார் ஆய பொதுமக்கள் பொல்லா ஒழுக்கம் அது-மன்னும் குன்றத்து வீழும் கொடி அருவி நல் நாட!- மன்றத்து மையல் சேர்ந்தற்று. |
119 |
நிலைபெற்ற மலையினின்றும் இழியும் கொடிபோன்ற அருவியை உடைய நல்ல மலைநாடனே! அறிவால் நிரம்பிய மக்களாய் இல்லையாதலோடு வெறுக்கத்தக்கவர்களாகிய சிறப்பில்லாத மக்கள் தீய ஒழுக்கத்தைப் பூண்டிருத்தல் ஆகிய அது நான்கு வீதிகள் சேரும் சதுக்கத்திலே பித்துஏறியவன் இருந்ததை ஒக்கும்.
கருத்து: கீழ்மக்களது தீய ஒழுக்கம் மிகவும்அஞ்சத்தக்கது.
தருக்கி ஒழுகித் தகவு அல்ல செய்தும், பெருக்க மதித்தபின் பேணாத செய்தும், கரப்புடை உள்ளம் கனற்று பவரே- செருப்பிடைப் பட்ட பரல். |
120 |
(பிறர் தன்னை மதியாத இடத்து) தன்னைத்தானே மதித்து ஒழுகித் தகுதியல்லாத செயல்களைச் செய்தும் பிறர் தன்னை மிகுதியும் மதித்த இடத்து அவர் விரும்பத் தகாதனவற்றைச் செய்தும் மறைந்த எண்ணங்கொண்டு பிறரை வருத்துபவர் செருப்பின்கண் பொருந்தி இருக்கும்பருக்கைக் கல்லை ஒப்பர்.
கருத்து: கரந்த உள்ளமுடைய கீழ்மக்கள் பெரியோர் செய்யும் செயல்களுக்கு இடையூறாக நிற்பர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்து, இலக்கியங்கள், செய்தும், தன்னை, கூறும், பிறர், நானூறு, கீழ்க்கணக்கு, செய்த, கீழ்மக்கள், பதினெண், பழமொழி, இருந்த, செய்வார்கள், ஒழுக்கம், இடத்து, ஒழுகித், உண்மையைக், செய்து, கடல், நாவாய், சொல்லும், சங்க, வாங்கி, அடக்குதல், செயல்களைச், அவர், தாம், இன்மை, பெரியோர்