ஏலாதி - பதினெண் கீழ்க்கணக்கு
பொய் தீர் புலவர் பொருள் புரிந்து ஆராய்ந்த மை தீர் உயர் கதியின் மாண்பு உரைப்பின், - மை தீர் சுடர் இன்று; சொல் இன்று; மாறு இன்று; சோர்வு இன்று; இடர் இன்று; இனி துயிலும் இன்று. |
66 |
பொய் தீர்ந்த வறிவுடையார் பொருளாக விரும்பி யாராய்ந்த குற்றந்தீர்ந்த வீட்டுலகின் மாட்சிமையையுரைப்போமாயின், ஒளியில்லை, உரையில்லை, மாறுபாடில்லை, கேடில்லை, துன்பமில்லை, இனிய துயிலு மில்லை.
கருத்து: வீடுபேற்றிற் பகலிரவு முதலாயின இல்லையென்க.
கூர் அம்பு, வெம் மணல் ஈர் மணி, தூங்கலும், ஈரும் புகை, இருளோடு, இருள், நூல் ஆராய்ந்து, அழி கதி, இம் முறையான், ஆன்றார் அறைந்தார் - இழி கதி, இம் முறையான் ஏழு. |
67 |
கூரிய வம்பும், வெம்மணலும் குளிர்ந்த மணியு, மொழுகியவன்று மீரத்தக்க புகையு, மிருளிலிருளுமென நூலால் நிரம்பினார் ஆயி னழியுங் கதிக ளிம் முறையினின்று மொழிந்த வருந்தவர் சொல்லினா ரிழிகதியாகிய நரகங்களில் முறையா னேழாக.
கருத்து: அம்புள்ள இடம் முதலாகத் தீவாய்க் குழிகள் ஏழென்ப.
சாதல், பொருள் கொடுத்தல், இன்சொல், புணர்வு உவத்தல், நோதல், பிரிவில் கவறலே, ஓதலின் அன்புடையார்க்கு உள்ளன ஆறு குணம் ஆக, மென்புடையார் வைத்தார், விரித்து. |
68 |
சாவிற்சாதலும், பொருள் கொடுத்தலும், இன்சொற் சொல்லுதலும், புணர்ச்சி விரும்புதலும், நோவில் நோதலும், பிரிவின் கலங்குதலு மெனு மிவ்வாறு குணமும் நீங்காத வன்புடையார்க் குள்ளனவாக மெல்லிய திறப்பாட்டையுடையார் விரித்துரைத்து வைத்தார்.
கருத்து: சாவின் சாதல் முதலியன உள்ளன்புடையார் செயல்களாம்.
எடுத்தல், முடக்கல், நிமிர்த்தல், நிலையே, படுத்தலோடு, ஆடல், பகரின், அடுத்து உயிர் ஆறு தொழில் என்று அறைந்தார், உயர்ந்தவர் - வேறு தொழிலாய் விரித்து. |
69 |
உறுப்பினை யெடுத்தலும் முடக்கலும், நிமிர்த்தலும், நிற்றலும், கிடத்தலும், ஆடுதலுமெனத் தொழிலாறு வகைப்படும், பகர்வேமாயி னித்தொழில்களையடுத் துயிர் தனது வருத்த முறுந் தொழிலென்றவற்றை யறிந்தார் சொன்னாரொன் றொன்றனோடு வேறுபட்ட தொழிலாக விரித்து.
கருத்து: உயிர்களை எடுத்தல் முதலாயின, உடம்பெடுத்த உயிர்களின் தொழில்கள் என்க.
ஐயமே, பிச்சை, அருந் தவர்க்கு ஊண், ஆடை, ஐயமே இன்றி அறிந்து ஈந்தான், வையமும் வானும் வரிசையால் தான் ஆளும் - நாளுமே, ஈனமே இன்றி இனிது. |
70 |
இரந்தவர்க் கையமும், பிச்சையும் அருந்தவர்க்கூணு, முடையில்லாதார்க் குடையு மென்றிந் நான்கினையுங் கொடைப்பயன்களை யறிந் தையமின்றித் துணிந்து கொடுத்தான்; வையத்தையும் வானத்தையு முறைமையானே நாடோறுமாளுங் குறைவின்றி யினிதாக.
கருத்து: ஐயம் முதலியவற்றை இயல்பறிந்து கொடுப்பவன் இம்மை மறுமை நலன்களை எய்துவான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஏலாதி - பதினெண் கீழ்க்கணக்கு, இன்று, கருத்து, இலக்கியங்கள், ஏலாதி, கீழ்க்கணக்கு, பதினெண், விரித்து, பொருள், தீர், இன்றி, எடுத்தல், ஐயமே, வைத்தார், முதலாயின, சங்க, பொய், முறையான், அறைந்தார், சாதல்