ஏலாதி - பதினெண் கீழ்க்கணக்கு
ஆர்வமே, செற்றம், கதமே, அறையுங்கால், ஒர்வமே, செய்யும் உலோபமே, சீர்சாலா மானமே, மாய உயிர்க்கு ஊனம் என்னுமே - ஊனமே தீர்ந்தவர் ஒத்து. |
61 |
சுற்றத்தார்மே லன்பும், செற்றமும், கோபமும் சொல்லுங்காற் பாங்கோடுதலும், உள்ளத்தாற் செய்யப்படு முலோபமும், சீர் நிரம்பாத மானமு மென்று சொல்லப்பட்ட ஆறு திறமு மாயத்தையுடைய வுயிர்கட்குக் குற்றமென்று சொல்லும் குற்றந்தீர்ந்தார் சொல்லிய நூல்கள்.
கருத்து: அவா முதலியன தீது தருமென்று அறிவு நூல்கள் கூறும்.
கூத்தும், விழவும், மணமும், கொலைக் களமும், ஆர்த்த முனையுள்ளும், வேறு இடத்தும், ஒத்தும் ஒழுக்கம் உடையவர் செல்லாரே; செல்லின், இழுக்கம் இழவும் தரும். |
62 |
கூத்தாடு மிடத்தும், விழாச் செய்யுமிடத்தும், மணஞ் செய்யுமிடத்தும், ஆர்த்த போர்க்களத்தும், பகைவரிடத்தும், இதுபோலும் வேறிடத்தும் ஒழுக்க முடையவர் செல்லார். செல்வராயின் உயிர்க்கிடையூறும் பொருளிழவுந் தரும்.
கருத்து: கூத்தாடுமிடம் முதலியவற்றிற்குச் செல்லுதல் கீழ்மைத் தன்மையையும் பொருளழிவையும் உண்டாகும்.
ஊணொடு, கூறை, எழுத்தாணி, புத்தகம், பேணொடும் எண்ணும், எழுத்து, இவை மாணொடு கேட்டு எழுதி, ஓதி, வாழ்வார்க்கு ஈய்ந்தார் - இம்மையான் வேட்டு எழுத வாழ்வார், விரிந்து. |
63 |
ஊணும் ஆடையும், எழுத்தாணியும், பொத்தகமும் என்கின்ற நான்கினையும், விருப்பத்துடனேயெண்ணும், எழுத்து மென்னு மவற்றையு மாணாக்கர் தொழிலினாற் கேட்டெழுதி யோதி வாழ்வார். முற்பிறப்பின்கட் கொடுத்தா ரிப்பிறப்பின்க ணுலகத்தார் விரும்பித் தம தாணை விரும்பியெழுத மன்னராய் வாழ்கின்றார்.
கருத்து: ஊக்கத்தோடு கற்கும் மாணாக்கர்களுக்கு ஊண் உடை முதலியன கொடுத்துதவுகின்றவர்கள் செல்வராய் வாழ்வர்.
உயர்ந்தான் தலைவன் என்று ஒப்புடைத்தா நோக்கி, உயர்ந்தான் நூல் ஓதி ஒடுங்கி, உயர்ந்தான் அருந் தவம் ஆற்றச் செயின், வீடு ஆம் என்றார் - பெருந் தவம் செய்தார், பெரிது. |
64 |
எல்லாரினு முயர்ந்தவன் றலைவனாவானென் றுள்ளங்கொண்டு, மாற்றவர்க்குச் சொன்ன நன்மையானே யொக்க வாராய்ந்து, உயர்ந்தவனாற் சொல்லப்பட்ட வாகமத்தை யோதி, அவ்வாகமத்திற் சொன்ன வகையானேயடக்க முடையவனாய்; அவ்வுயர்ந்தவன் சொல்லிய வரிய தவத்தை மிகவுஞ் செய்தால், பிறப்பில்லாத வீடாமென்று சொல்லினார், மிகவும் பெருந் தவஞ்செய்தார்.
கருத்து: கடவுணெறியி லொழுகுவார்க்கே வீடுபேறுண்டாகுமென்பது சான்றோர் கருத்து.
காலனார் ஈடு அறுத்தல் காண்குறின், முற்று உணர்ந்த பாலனார் நூல் அமர்ந்து, பாராது, வாலிதா, ஊறுபாடு இல்லா உயர் தவம் தான் புரியின், ஏறுமாம், மேல் உலகம் ஓர்ந்து. |
65 |
காலனாரது வலியை யறுத்தும் பிறப் பறுக்கலுறின் முற்றுணர்ந்த தன்மையாரையு மவராற் சொல்லப்பட்ட வாகமத்தையும் விரும்பி யரிதென்று பாரா தூறுபாடில்லாத வுயர்ந்த தவத்தை யொருவன் செய்வானாயின் வீட்டுலகத்தின்க ணேறுமேனோக்கி.
கருத்து: ஆண்டவ னறிவுநூல்களை யோதித் தவஞ்செய்வார் வீடுபேறடைவர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஏலாதி - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்து, இலக்கியங்கள், ஏலாதி, தவம், உயர்ந்தான், சொல்லப்பட்ட, நூல்கள், பதினெண், கீழ்க்கணக்கு, நூல், பெருந், சொன்ன, யோதி, தவத்தை, ஆர்த்த, சொல்லிய, சங்க, முதலியன, தரும், எழுத்து, செய்யுமிடத்தும், வாழ்வார்