நற்றிணை - 304. குறிஞ்சி
வாரல் மென் தினைப் புலர்வுக் குரல் மாந்தி, சாரல் வரைய கிளைஉடன் குழீஇ, வளி எறி வயிரின் கிளி விளி பயிற்றும் நளி இருஞ் சிலம்பின் நல் மலை நாடன் புணரின், புணருமார் எழிலே; பிரியின், |
5 |
மணி மிடை பொன்னின் மாமை சாய, என் அணி நலம் சிதைக்குமார் பசலை; அதனால், அசுணம் கொல்பவர் கை போல், நன்றும், இன்பமும் துன்பமும் உடைத்தே, தண் கமழ் நறுந் தார் விறலோன் மார்பே. |
10 |
கிளிகள் சாரல் பொருந்திய மலையிலுள்ள சுற்றத்தொடு சேர்ந்து; தாம் கொள்ளையிடுதற்குரிய மெல்லிய தினையின் மணம் நிரம்பிய கதிரைக் கொய்து தின்று; காற்றினால் ஒலியெழுப்பும் கொம்பு வாச்சியம் போல ஒன்றனையொன்று அழையா நிற்கும் நெருங்கிய பக்க மலைகளையுடைய நல்ல மலைநாடன் வந்து; என்னைப் புணர்ந்த காலமெல்லாம் எனக்கு நிரம்பிய நல்ல அழகு உண்டாகாநிற்கும்; அவன் என்னைப் பிரிந்தாலோ; நீலமணியிடைப்பட்ட பொன்போல எனது மெய்யின் மாந்தளிரின் தன்மை கெட; என் அழகையும் நலத்தையும் பசலை தோன்றிக் கெடுக்காநிற்கும்; ஆதலினால் தண்ணிய தாய் மணங்கமழும் நறிய மாலையணிந்த வலிமையுடைய நம் காதலன் மார்பானது; இசையறிவிலங்காகிய அசுணமானைக் கொல்பவருடைய கையைப் போலப் பெரிதும் இன்பமும் துன்பமும் உடையதா யிராநின்றது;
வரையாது நெடுங்காலம் வந்தொழுக, ஆற்றாளாகிய தலைமகள் வன்புறை எதிர் மொழிந்தது. - மாறோக்கத்து நப்பசலையார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 304. குறிஞ்சி, இலக்கியங்கள், குறிஞ்சி, நற்றிணை, நிரம்பிய, நல்ல, என்னைப், துன்பமும், சாரல், எட்டுத்தொகை, சங்க, பசலை, இன்பமும்