நற்றிணை - 223. நெய்தல்
இவள்தன், காமம் பெருமையின், காலை என்னாள்; நின் அன்பு பெரிது உடைமையின், அளித்தல் வேண்டி, பகலும் வருதி, பல் பூங் கானல்; இன்னீர்ஆகலோ இனிதால் எனின், இவள் அலரின் அருங் கடிப் படுகுவள்; அதனால் |
5 |
எல்லி வம்மோ!- மெல்லம் புலம்ப! சுறவினம் கலித்த நிறை இரும் பரப்பின் துறையினும் துஞ்சாக் கண்ணர் பெண்டிரும் உடைத்து, இவ் அம்பல் ஊரே. |
மெல்லிய நெய்தல் நிலத்தலைவனே இவள் தன்னுடைய காமமிகுதியாலே இது காலைப் பொழுதாமே என்று கருதாளாகி நின்னாலே செய்யப்படும் அன்பைப் பெரிதும் பாராட்டுதல் உடைமையால்; இவளைத் தலையளி செய்யவேண்டி நீ பகற்பொழுதின் கண்ணும் பலவாய மலர்களையுடைய கழியருகிலுள்ள சோலையில் அன்று கொண்ட குறிவயின் வாராநின்றனை; இங்ஙனம் நீயிர் இருவீரும் களவின் ஒழுகுதல் இனிதேயா மென்றாலோ; ஊரார் கூறும் பழி மொழியே காரணமாக இவள் மீள்வதற்கரிய சிறையின்கண்ணே படுத்தப் படா நிற்பள்காண்!; ஆதலின் இனி நீ இராப் பொழுதையில் இங்கு வருகுவாயாக!; நீ அங்ஙனம் இரவின் வருவையாயினும் பழிச்சொல்லை மேலேறட்டுக் கூறா நிற்கும் இவ்வூர்; சுறாமீனினம் மிக்க நிறைந்த கடற்பரப்பிலுள்ள துறையிடத்தும்; துயிலாத கண்ணினராகிய கொடிய மாதரையும் உடையராயிராநின்றது; ஆதலின் இரவின் வருதலினும் இடும்பை எய்தும் போலும்;
பகற்குறி வந்து மீள்வானைத் தோழி இரவுக்குறி நேர்வாள் போன்று, அதுவும் மறுத்து, வரைவு கடாயது. - உலோச்சனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 223. நெய்தல், இலக்கியங்கள், நெய்தல், நற்றிணை, இவள், இரவின், ஆதலின், சங்க, எட்டுத்தொகை