நற்றிணை - 133. குறிஞ்சி

'தோளே தொடி கொட்பு ஆனா; கண்ணே வாள் ஈர் வடியின் வடிவு இழந்தனவே; நுதலும் பசலை பாயின்று- திதலைச் சில் பொறி அணிந்த பல் காழ் அல்குல் மணி ஏர் ஐம்பால் மாயோட்கு' என்று, |
5 |
வெவ் வாய்ப் பெண்டிர் கவ்வை தூற்ற, நாம் உறு துயரம் செய்யலர் என்னும்- காமுறு தோழி!- காதல்அம் கிளவி, இரும்பு செய் கொல்லன் வெவ் உலைத் தௌத்த தோய் மடற் சில் நீர் போல, |
10 |
நோய் மலி நெஞ்சிற்கு ஏமம் ஆம் சிறிதே. |
என்பால் விருப்ப மிக்க தோழீ! தித்தியின் சிலவாய புள்ளிகளமைந்த பலவாய வடங்களையுடைய காஞ்சி யணிந்த அல்குலையும் நீலமணி போன்ற கூந்தலையும் உடைய இம் மாமை நிறம் உடையாட்கு; தோள்கள் தாம் அணியப் பெற்ற வளை சுழன்று கழலுதலை நீங்கிற்றில, கண்களும் வாளாற் பிளந்த மாவடுப் போன்ற வடிவை இழந்தன நெற்றியும் பசலை பரவியது என்று; கொடிய வாயையுடைய ஏதிலாட்டியர் பழிச்சொல் எடுத்துத் தூற்றாநிற்கும்படி; நங் காதலர் அச்சமிகுகின்ற துன்பத்தை நமக்குச் செய்குபவர் அல்லர் ஆதலால் அவர் விரைய வருகுவர் என்று நீ என்னைத் தேற்றிக் கூறுகின்ற என்பால் அன்பு மிக்க இச் சொல்லானது; இரும்பு வேலை செய்கின்ற கொல்லன் தான் வெய்ய உலையிலே தௌ¤த்த பனைமடலாலே தோய்த்தலையுடைய சிலவாய நீர் அவ்வுலை நெருப்பைச் சிறிது அவிக்குமாறு போல; காமநோய் மிக்க என் நெஞ்சில் அந் நோயைச் சிறிது தணித்து எனக்குப்¢ பாதுகாவலராயிராநின்றது காண் !
வரைவிடை வைத்துப்பிரிவு ஆற்றாளாய தலைவி வற்புறுத்தும் தோழிக்குச்சொல்லியது. - நற்றமனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 133. குறிஞ்சி, இலக்கியங்கள், மிக்க, நற்றிணை, குறிஞ்சி, நீர், என்பால், கொல்லன், சிறிது, சிலவாய, வெவ், எட்டுத்தொகை, சங்க, பசலை, சில், இரும்பு