நற்றிணை - 132. நெய்தல்
பேர் ஊர் துஞ்சும்; யாரும் இல்லை; திருந்து வாய்ச் சுறவம் நீர் கான்று, ஒய்யெனப் பெருந் தெரு உதிர்தரு பெயலுறு தண் வளி போர் அமை கதவப் புரை தொறும் தூவ, கூர் எயிற்று எகினம் நடுங்கும் நல் நகர்ப் |
5 |
பயில்படை நிவந்த பல் பூஞ் சேக்கை அயலும் மாண் சிறையதுவே; அதன்தலை, 'காப்புடை வாயில் போற்று, ஓ' என்னும் யாமம் கொள்பவர் நெடு நா ஒண் மணி ஒன்று எறி பாணியின் இரட்டும்; |
10 |
இன்றுகொல், அளியேன் பொன்றும் நாளே? |
பெரிய இவ்வூரின்கணுள்ளார் யாருந் துயிலாநிற்பர், விழித்தியங்குபவர் ஒருவரும் இல்லை; இக்காலத்து நாம் அவரை யடையப் பெறாதபடி திருந்திய வாயையுடைய சுறாமீன் நீரைக் கக்குதலால் அந் நீர் விரைவிலே பெரிய தெருவின்கண் உதிர்கின்ற; மழையாக அம் மழையோடு பொருந்திய தண்ணிய காற்று தம்மின் ஒன்றோடொன்று பொருந்துதலமைந்த வாயிற்கதவிலுள்ள துளைகள்தோறும் அந் நீரைக் கொணர்ந்து தூவாநிற்ப; அத் தூவலாலே கூரிய பற்களையுடைய நாய்கள் நடுங்குகின்ற இவ்விராப்பொழுதில் நல்ல மாளிகையின்கண்ணே; துயிலுமாறு உயர்ந்த பலவாய மலர்களாலமைந்த படுக்கையின் பக்கத்திலும்; மாட்சிமைப்பட்ட சிறைப்படுத்திய காவலையுடைத்தாயிராநின்றது; அதன் மேலும் 'காவலையுடைய தலைக்கடை புழைக்கடை வாயில்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் ஓ!' என்று கூறாநின்ற; யாமந்தோறும் காவல் செய்தலை மேற்கொள்ளும் காவலரின் நெடிய நா அமைந்த ஒள்ளிய மணி ஒன்றுகின்ற தாளத்தில் மோதி எழுப்பும் ஒலி போல ஒலியாநிற்கும்; ஆதலின் யாவராலும் இரங்கத்தகுந்த யான் இறந்தொழியும் நாள் இன்று தானோ?
காப்பு மிகுதிக்கண்ஆற்றாளாகிய தலைவிக்குத் தோழி சொல்லியது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 132. நெய்தல், இலக்கியங்கள், நற்றிணை, நெய்தல், பெரிய, நீரைக், நீர், இல்லை, எட்டுத்தொகை, சங்க