குறுந்தொகை - 96. குறிஞ்சி - தலைவி கூற்று
(தலைமகன் வரையாதுவந்து ஒழுகிய காலத்தில் அவனைத் தோழி இயற்பழித்தாளாக, அது கேட்ட தலைவி தோழியைச் சினந்து கூறியது.)
அருவி வேங்கைப் பெருமலை நாடற்கு யானெவன் செய்கோ என்றி யானது நகையென உணரேன் ஆயின் என்னா குவைகொல் நன்னுதல் நீயே. |
|
- அள்ளூர் நன்முல்லையார். |
நல்ல நெற்றியை உடையாய் அருவியினதருகில் வளர்ந்த வேங்கை மரங்களையுடைய பெரிய மலையையுடைய நாட்டுக்குரிய தலைவன் திறத்து நான் என்ன செய்வேன் என்று கூறி அவனை இயற்பழித்தாய்; நீ அங்ஙனம் கூறியதை நான் விளையாட்டு மொழி யென்று உட்கொண்டிரேனாயின் நீ என்ன பாடு படுவாய்? மிகவும் துன்புறுவாயன்றே.
முடிபு: நன்னுதல், நாடற்கு யான் எவன் செய்கோ என்றி; யான் அது நகையென உணரேனாயின், நீ என்னாகுவை?
கருத்து: நீ தலைவனை இயற்பழித்தல் தகாது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 96. குறிஞ்சி - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, நான், நன்னுதல், யான், நகையென, என்ன, நாடற்கு, எட்டுத்தொகை, சங்க, செய்கோ, என்றி