குறுந்தொகை - 88. குறிஞ்சி - தோழி கூற்று
(“தலைவன் இரவுக்குறியை விரும்புகின்றான்: இனி இரவிலே வருவான்” என்று தோழி தலைவிக்குக் கூறியது.)
ஒலிவெள் ளருவி ஓங்குமலை நாடன் சிறுகண் பெருங்களிறு வயப்புலி தாக்கித் தொல்முரண் சோருந் துன்னருஞ் சாரல் நடுநாள் வருதலும் வரூஉம் வடுநா ணலமே தோழி நாமே. |
5 |
- மதுரைக் கதக்கண்ணனார். |
தோழி! ஒலிக்கும் வெள்ளிய அருவியையுடைய உயர்ந்த மலைகளுள்ள நாட்டையுடைய தலைவன் சிறிய கண்ணையுடைய பெரிய களிறு வலியையுடைய புலியை எதிர்த்துப் பொருது தனது பழைய வலி சோர்தற்கிடமாகிய மக்கள் அடைதற்கரிய சாரலின் வழியே இடையிரவில் வருதலையும் செய்வான்; அங்ஙனம் அவன் வருதலி னால் நமக்கு உண்டாகும் பழிக்கு நாம் நாணேம்.
முடிபு: தோழி, மலைநாடன் வருதலும் வரூஉம்; நாம் வடு நாணலம்.
கருத்து: தலைவர் இனி இரவில் வந்து அளவளாவுவர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 88. குறிஞ்சி - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, நாம், வரூஉம், எட்டுத்தொகை, சங்க, வருதலும்