குறுந்தொகை - 86. குறிஞ்சி - தலைவி கூற்று
(தலைவனது பிரிவைத் தலைவி ஆற்றாளெனக் கவலை உற்ற தோழியை நோக்கி, “தலைவர் என்னோடு இருந்து இன்புறுதற்கு உரிய பொழுதாகிய இக்கூதிர் யாமத்திலே தனிமைத்துன்பத்தை மிகுதிப்படுத்தும் ஆன்மணிக்குரலைக் கேட்பார் வேறு யாருளர்? நான் ஒருத்தியேயன்றோ?” என்று தலைவி கூறியது.)
சிறைபனி உடைந்த சேயரி மழைக்கண் பொறையரு நோயொடு புலம்பலைக் கலங்கிப் பிறருங் கேட்குநர் உளர்கொல் உறைசிறந்து ஊதை தூற்றம் கூதிர் யாமத்து ஆனுளம் புலம்புதொ றுளம்பும் |
5 |
நாநவில் கொடுமணி நல்கூர் குரலே. | |
- வெண்கொற்றனார். |
தோழி! மழைத்துளி மிக்கு வாடைக்காற்று வீசித் தூவுகின்ற கூதிர்ப் பருவத்தின் நள்ளிரவில் எருதானது ஈ ஒலிக்குந்தோறும் அலைகின்ற நாவினால் முழங்குகின்ற கொடிய மணியின் மெல்லிய ஓசையை தடுக்கப்பட்ட நீர் உடைந்து துளித் துளியாக விழுகின்ற செம்மையான அரிகளையும் குளிர்ச்சியையுமுடைய கண்ணோடும் பொறுத்தற்கரிய காமநோயோடும் தனிமை வருத்துதலாற் கலங்கி கேட்டு வருந்துவார் என்னையன்றிப் பிறமகளிரும் உள்ளாரோ?
முடிபு: கூதிர்யாமத்து ஆன் உளம்பும் மணியின் குரலைக் கேட்குநர் பிறகும் உளர் கொல்?
கருத்து: தலைவர் உடனிருத்தற்குரிய இப்பருவத்தில் யானொருத் தியே தனிமைத் துன்பத்தை உடையேன் ஆயினேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 86. குறிஞ்சி - தலைவி கூற்று, தலைவி, இலக்கியங்கள், குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, மணியின், கேட்குநர், எட்டுத்தொகை, சங்க