குறுந்தொகை - 83. குறிஞ்சி - தோழி கூற்று
(வரைவுக்குரிய முயற்சிகளோடு வந்த தலைவனைச் செவிலி ஏற்றுக் கொண்டமையைத் தோழி அச்செவிலியை வாழ்த்தும் வாயிலாகத் தலைவிக்கு உணர்த்தியது.)
அரும்பெறல் அமிழ்தம் ஆர்பதம் ஆகப் பெரும்பெயர் உலகம் பெறீஇயரோ அன்னை தம்மில் தமதுண் டன்ன சினைதொறும் தீம்பழந் தூங்கும் பலவின் ஓங்குமலை நாடனை வரும்என் றாளே. |
5 |
- வெண்பூதனார். |
தமது வீட்டின்கண் இருந்து தமது முயற்சியால் ஈட்டிய பொருளில் தம் கூற்றை உண்டாற் போன்ற இன்சுவையைத் தருவனவாகி கொம்பு தோறும் இனிய பழங்கள் தொங்குகின்ற பலாமரங்களையுடைய உயர்ந்த மலைகளுள்ள நாட்டுக்குத் தலைவனை வரைதற்குரிய பொருளோடு வருவானென்று கூறியவளாகிய அன்னை! பெறுதற்கரிய அமிழ்தமே உண்ணும் உணவாக பெரும்புகழுடைய சுவர்க்கத்தை பெறுவாளாக.
முடிபு: நாடனை வருமென்றோளாகிய அன்னை, பெரும் பெயருலகம் பெறீஇயர்.
கருத்து: தலைவர் வருவாரென்று உணர்த்திய செவிலி வாழ்வாளாக.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 83. குறிஞ்சி - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, அன்னை, நாடனை, தமது, சங்க, எட்டுத்தொகை, செவிலி