குறுந்தொகை - 69. குறிஞ்சி - தோழி கூற்று
(இரவுக்குறியை விரும்பிய தலைவனை நோக்கி, "நீ இரவில் வருவை யாயின் நினக்குத் தீங்குண்டாகுமோ வென்றேண்ணி யாம் வருந்துவோம்; ஆதலின் நீ வாரற்க" என்று தோழி மறுத்துக் கூறியது.)
கருங்கண் தாக்கலை பெரும்பிறி துற்றெனக் கைம்மை உய்யாக் காமர் மந்தி கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி ஓங்குவரை அடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும் சாரல் நாட நடுநாள் |
5 |
வாரல் வாழியோ வருந்துதும் யாமே. | |
- கடுந்தோட் கரவீரனார். |
கரிய கண்ணையும் தாவுதலையும் உடைய ஆண்குரங்கு இறந்து பாட்டை அடைந்ததாக கைம்மைத் துன்பத்தைப் போக்கமாட்டாத விருப்பத்தையுடைய பெண்குரங்கானது மரமேறுதல் முதலிய தம் தொழிலைக் கல்லாத வலிய குட்டியை சுற்றத்தினிடத்து கையடையாக ஒப்பித்து ஓங்கிய மலைப் பக்கத்தில் தாவி உயிரை மாய்த்துக் கொள்ளும் சாரலையுடைய நாட்டுக்குத் தலைவனே நள்ளிரவில் வாரற்க; அங்ஙனம் நீவரின் நினக்குத் தீங்குண்டா மென்றெண்ணி நாம் வருந்துவோம் நீ தீங்கின்றி வாழ்வாயாக!
முடிபு: நாட, நடுநாள் வாரல்; யாம் வருந்துதும்; வாழி!
கருத்து: நீ இரவில் வருதலை யொழி.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 69. குறிஞ்சி - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, நடுநாள், வாரற்க, வருந்துதும், வருந்துவோம், வாரல், இரவில், எட்டுத்தொகை, சங்க, நினக்குத், யாம்