குறுந்தொகை - 49. நெய்தல் - தலைவி கூற்று
(தலைமகன் பரத்தையிற் பிரிந்து மீண்டுவந்த காலத்து முன்னிருந்த ஆற்றாமை நீங்கி, அவனோடு அளவளாவி, “நாம் பிறவிதோறும் அன்புடைய கணவனும் மனைவியுமென இருப்போமாக!” என்று தலைவி கூறியது.)
அணிற்பல் அன்ன கொங்குமுதிர் முண்டகத்து மணிக்கேழ் அன்ன மாநீர்ச் சேர்ப்ப இம்மை மாறி மறுமை யாயினும் நீயா கியரென் கணவனை யானா கியர்நின் னெஞ்சுநேர் பவளே. |
5 |
- அம்மூவனார். |
அணிலின் பல்லை ஒத்த முள்ளையுடைய தாது முதிர்ந்த முள்ளிச் செடியையும் நீலமணியினது நிறத்தை ஒத்த கரிய நீரையுமுடைய கடற்கரையை உடைய தலைவ இப்பிறப்பு நீங்கப்பெற்று நமக்கு வேறு பிறப்பு உண்டாயினும் என்னுடைய தலைவன் இப்பொழுது என்பால் அன்பு செய்தொழுகும் நீயே ஆகுக! நின்னுடைய மனத்திற்கு ஒத்த காதலி இப்பொழுது நின் நெஞ்சு கலந்தொழுகும் யானே ஆகுக!
முடிபு: சேர்ப்ப, மறுமையாயினும் நீ என் கணவன் ஆகியர் ! நின் நெஞ்சு நேர்பவள் யான் ஆகுக!
கருத்து: நம்முடைய அன்பு பிறவிதோறும் தொடரும் இயல்பின தாகுக!
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 49. நெய்தல் - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, ஒத்த, நெய்தல், குறுந்தொகை, கூற்று, ஆகுக, அன்பு, நின், நெஞ்சு, இப்பொழுது, பிறவிதோறும், எட்டுத்தொகை, சங்க, அன்ன, சேர்ப்ப