குறுந்தொகை - 48. பாலை - தோழி கூற்று
(தலைவன் பகல் பொழுதில் வந்து தலைவியுடன் பழகும் காலத்தில் அவனைக் காணாது நெடுநேரம் கழிவதனால் துயருற்ற தலைவியினது மேனியிற் பசலை முதலிய வேறுபாடுகள் உண்டானமை கண்டு வருந்தி, “தலைவர் இவளை வரைந்து கொள்வோம் என்று சொல்லாரோ!” என்று தோழி கூறியது.)
தாதிற் செய்த தண்பனிப் பாவை காலை வருந்துங் கையா றோம்பென ஓரை யாயங் கூறக் கேட்டும் இன்ன பண்பி னினைபெரி துழக்கும் நன்னுதல் பசலை நீங்க வன்ன |
5 |
நசையாகு பண்பின் ஒருசொல் இசையாது கொல்லோ காதலர் தமக்கே. |
|
- பூங்கணுத்திரையார். |
பூந்தாது முதலிய பொடிகளாற் செய்யப்பட்ட மிக்க குளிர்ச்சியையுடைய விளையாட்டுப் பாவையானது காலைப் பொழுதில் வருந்துதலாற் பிறந்த செயலறுதலை ஒழிப்பாயாகவென்று விளையாட்டையுடைய மகளிர் திரள் சொல்லக் கேட்டபின்பும் இத்தகைய தன்மையையுடைய வருத்தத்தை மிக அடையும் நல்ல நெற்றியையுடைய தலைவியினது பசலை நீங்கும்படி தலைவர் மாட்டு இவளுக்கு விருப்பமாகும் தன்மையையுடைய அத்தகைய ஒரு சொல்லானது இயலாதோ?
முடிபு: ஆயம் கூறக்கேட்டும் உழக்கும் நன்னுதலின் பசலை நீங்க ஒரு சொல் காதலர் தமக்கு இசையாது கொல்?
கருத்து: தலைவன் இத்தலைவியை வரைந்து கொண்டால் இவள் தன் துன்பத்தினின்றும் நீங்குவாள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 48. பாலை - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, பசலை, குறுந்தொகை, பாலை, கூற்று, நீங்க, காதலர், தன்மையையுடைய, வரைந்து, இசையாது, பொழுதில், எட்டுத்தொகை, சங்க, தலைவன், தலைவியினது, முதலிய