குறுந்தொகை - 50. மருதம் - தலைவி கூற்று
(பரத்தையிற் பிரிந்த தலைவனால் விடப்பட்ட தூதுவரை நோக்கி, “அவர் விளையாடும் துறை அழகு பெற்றது; அவர் மணந்த தோள் மெலிவுற்றது” என்று தலைவி கூறியது.)
ஐயவி அன்ன சிறுவீ ஞாழல் செவ்வி மருதின் செம்மலொடு தாஅய்த் துறைஅணிந் தன்றவ ரூரே யிறையிறந் திலங்குவளை ஞெகிழச் சாஅய்ப் புலம்பணிந் தன்றவர் மணந்த தோளே. |
5 |
- குன்றியனார். |
வெண்சிறு கடுகைப் போன்ற சிறிய பூக்களையுடைய ஞாழல் மரத்தின் பூ செம்மையாகிய மலர்களையுடைய மருத மரத்தின் பழம்பூவோடு பரந்து தலைவருடைய ஊரின் இடத்தில் நீர்த் துறையை அழகு செய்தது; அவர் முன்பு அளவளாவிய என் தோள் விளங்கும் வளையல்கள் மூட்டுவாய்ச் சந்தைக் கடந்து நெகிழும்படி மெலிந்து தனிமையையே அழகாகப் பெற்றது.
முடிபு: ஞாழல் தாஅய் அவர் ஊரில் துறையை அணிந்தன்று; அவர் மணந்ததோள் புலம்பணிந்தன்று.
கருத்து: அவர் என்னைப் புறக்கணித்தமையால் நான் மெலிந்தேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 50. மருதம் - தலைவி கூற்று, அவர், இலக்கியங்கள், தலைவி, ஞாழல், குறுந்தொகை, கூற்று, மருதம், துறையை, தோள், மரத்தின், அழகு, எட்டுத்தொகை, சங்க, பெற்றது, மணந்த