குறுந்தொகை - 46. மருதம் - தலைவி கூற்று
(தலைவன் பிரிந்த காலத்தில் தலைவி ஆற்றமாட்டாளென்று கவலையுற்ற தோழியை நோக்கி, “என்னைத் துன்புறுத்தும் மாலைக் காலமும் தனிமையும் தலைவர் சென்ற நாட்டிலும் உளவாதலின் அவருக்கும் அவற்றால் துன்பம் உண்டாகும்; அதனால் அவர் விரைவில் வருவாரென்று எண்ணி யான் ஆற்றுகின்றேன்” என்று தலைவி கூறியது).
ஆம்பற் பூவின் சாம்ப லன்ன கூம்பிய சிறகர் மனையுறை குரீஇ முன்றில் உணங்கல் மாந்தி மன்றத்து எருவினுண் தாது குடைவன ஆடி இல்லிறைப் பள்ளித்தம் பிள்ளையொடு வதியும் |
5 |
புன்கண் மாலையும் புலம்பும் இன்றுகொல் தோழியவர் சென்ற நாட்டே. |
|
- மாமலாடனார். |
தோழி! ஆம்பல் மலரின் வாடலையொத்த குவிந்த சிறகுகளையுடைய வீட்டின்கண் தங்கும் குருவிகள் முற்றத்தில் உலருந் தானியங்களைத் தின்று பொதுவிடத்தின் கணுள்ள எருவினது நுண்ணிய பொடியைக் குடைந்து விளையாடி வீட்டிறப்பிலுள்ள இடத்தே தம்முடைய குஞ்சுகளோடு தங்கியிருக்கும் பிரிந்தார்க்குத் துன்பத்தைத் தரும் மாலைக் காலமும் தனிமையும் அத்தலைவர் பிரிந்து சென்ற தேயத்தில் இல்லையோ?
முடிபு: தோழி, அவர் சென்ற நாட்டு, மாலையும் புலம்பும் இன்று கொல்?
கருத்து: என்னுடைய பிரிவினால் தலைவரும் துன்புறுவர் ஆதலின் விரைந்து வருவர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 46. மருதம் - தலைவி கூற்று, தலைவி, சென்ற, இலக்கியங்கள், மருதம், குறுந்தொகை, கூற்று, மாலையும், அவர், தோழி, புலம்பும், மாலைக், எட்டுத்தொகை, சங்க, காலமும், தனிமையும்