குறுந்தொகை - 392. குறிஞ்சி - தோழி கூற்று
(தலைவன் வரைவு நீட்டித்தானாக அவன் சிறைப்புறத்தே நிற்குங்கால் தோழி வண்டினை நோக்கிக் கூறுவாளாகி, “தலைவி இன்னும் தன்வீட்டிலேயே உறைகின்றாளென்று சொல்வாயாக” என்றது).
அம்ம வாழியோ அணிச்சிறைத் தும்பி நன்மொழிக் கச்ச மில்லை யவர்நாட் டண்ணல் நெடுவரைச் சேறி யாயிற் கடமை மிடைந்த துடவையஞ் சிறுதினைத் துளரெறி நுண்டுகட் களைஞர் தங்கை |
5 |
தமரின் தீராள் என்மோ அரசர் நிரைசெல னுண்டோல் போலப் பிரசந் தூங்கு மலைகிழ வோர்க்கே. |
|
- தும்பிசேர் கீரனார். |
அழகிய சிறகுகளையுடைய தும்பியே ஒன்று கூறுவன் கேட்பாயாக நல்ல மொழிகளை ஒருவர்பால்கூறுந்திறத்தில் அச்சம் இல்லை அத்தலைவருடய நாட்டிலுள்ள தலமையையுடைய உயர்ந்த மலைக்குச் செல்வாயாயின் அரசர்களது வரிசையாகச் செல்லுதலையுடைய நுண்ணிய கேடகங்களைப் போல தேனடைகள் தொங்குகின்ற மலையையுடைய தலைவரிடத்தில் கடமை மான்கள் நெருங்கிய தோட்டத்திலுள்ள அழகிய சிறுதினையிடத்தே களைக்கொட்டை எறிவதனால்உண்டாகிய நுண்ணிய புழுதியையுடைய களையெடுப்பாருடைய தங்கையாகிய தலைவி தன் சுற்றத்தாரிடத்தினின்றும் நீங்காளாயினாள்; என்றுகூறுவாயாக.
முடிபு: தும்பி, அச்சம் இல்லை; சேறியாயின் மலைகிழவோர்க்கு, களைஞர் தங்கை தீராளென்மோ.
கருத்து: வண்டே, தலைவியினுடைய நிலையை நீ போய்த் தலைவனுக்குச் சொல்லுவாயாக.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 392. குறிஞ்சி - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, அச்சம், அழகிய, நுண்ணிய, தங்கை, இல்லை, தும்பி, எட்டுத்தொகை, சங்க, கடமை, களைஞர்