குறுந்தொகை - 385. குறிஞ்சி - தலைவி கூற்று
(நொதுமலர் வரைவொடு புகுந்தமையறிந்த தலைவி, ‘‘தலைவன்தன் அன்பிற் சிறிதும் குறையாதிருப்ப அதனை யறியாது இவ்வூரிற்புதியோர் சிலர் வந்தனர்” என்று கூறுவாளாய்த் தோழியை அறத்தொடுநின்று அவ்வரைவை மாற்றச் சொல்லியது.)
பலவிற் சேர்ந்த பழமார் இனக்கலை சிலைவிற் கானவன் செந்தொடை வெரீஇச் செருவுறு குதிரையிற் பொங்கிச் சாரல் இருவெதிர் நீடமை தயங்கப் பாயும் பெருவரை அடுக்கத்துக் கிழவோன் என்றும் |
5 |
அன்றை யன்ன நட்பினன் புதுவோர்த் தம்மவிவ் வழுங்க லூரே. |
|
- கபிலர். |
பலாமரத்திற் பொருந்திய பழத்தை உண்ட திரளையுடைய ஆண் குரங்குகள் சிலைமரத்தாற் செய்த வில்லையுடைய வேட்டுவனதுகுறிபிழையாச் செம்மையையுடைய அம்புத் தொடைக்குஅஞ்சி போர்க்களத்தேஅடைந்த குதிரையைப் போல மேலெழுந்து சாரலிலுள்ள பெரிய மூங்கிலினதுநீண்ட கோல் அசைய பாய்கின்ற பெரிய மலைப்பக்கத்தையுடைய தலைவன் எப்பொழுதும்அன்றிருந்ததைப் போன்று மாறுபாடின்றி இருக்கும்நட்பையுடையான் அங்ஙனம் இருப்பவும் இந்த ஆரவாரத்தையுடைய ஊரானது என் மணங்குறித்து வந்த புதியவர்களையுடையது.
முடிபு: கிழவன் என்றும் அன்றையன்ன நட்பினன்; இவ்வூர்புதுவோர்த்து.
கருத்து: நொதுமலர் வரையப்புகுந்தனர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 385. குறிஞ்சி - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, நட்பினன், என்றும், பெரிய, சங்க, எட்டுத்தொகை, நொதுமலர்