குறுந்தொகை - 379. குறிஞ்சி - தோழி கூற்று
(அயலார் தலைவியை வரையும்பொருட்டு வந்த காலத்துத்தலைவிக்குக் கூறுவாளாய், “முன்பு நின்பால் அன்பு பூண்ட தலைவன் இப்பொழுது எங்குள்ளானோ?” என்று தோழி தாய் முதலியோருக்கு உண்மையை வெளிப்படுத்தியது.)
இன்றியாண் டையனோ தோழி குன்றத்துப் பழங்குழி அகழ்ந்த கானவன் கிழங்கினொடு கண்ணகன் தூமணி பெறூஉம் நாடன் அறிவுகாழ்க் கொள்ளும் அளவைச் செறிதொடி எம்மில் வருகுவை நீயெனப் |
5 |
பொம்மல் ஓதி நீவி யோனே. | |
-. .... |
தோழி! குன்றினிடத்தே பழைய குழியைத் தோண்டியவேட்டுவன் கிழங்கினொடு! இடம் அகன்ற தூய மணியைப் பெறும் நாட்டையுடையவனும் செறிந்த தொடியையுடையாய் நின் அறிவு முதிர்கின்றபருவத்தில் நீ எம்முடையவீட்டுக்கு இல்லறம் நடத்த வருவாயென்று கூறி நெருக்கத்தையுடைய கூந்தலை தடவியவனுமாகிய தலைவன் இன்றுஎவ்விடத்தில் உள்ளானோ?
முடிபு: தோழி, நாடன் நீவியோன் இன்று யாண்டையனோ?
கருத்து: நின்பால் அன்புபூண்ட தலைவன் இப்பொழுது எங்கே உள்ளானோ?
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 379. குறிஞ்சி - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், கூற்று, தலைவன், குறுந்தொகை, குறிஞ்சி, நாடன், உள்ளானோ, கிழங்கினொடு, நின்பால், எட்டுத்தொகை, சங்க, இப்பொழுது