குறுந்தொகை - 376. நெய்தல் - தலைவன் கூற்று
(பொருள்வயிற் பிரியக் கருதிய நெஞ்சை நோக்கித் தலைவியின் நல்லியல்பு கூறித் தலைவன் செலவு தவிர்ந்தது.)
மன்னுயிர் அறியாத் துன்னரும் பொதியிற் சூருடை அடுக்கத் தாரங் கடுப்ப வேனி லானே தண்ணியள் பனியே வாங்குகதிர் தொகுப்பக் கூம்பி ஐயென அலங்குவெயிற் பொதிந்த தாமரை |
5 |
உள்ளகத் தன்ன சிறுவெம் மையளே. | |
- படுமாத்து மோசிகொற்றனார். |
நெஞ்சே நிலைபெற்ற உயிர்த் தொகுதியினரால் முற்ற அறியப்படாத அணுகுதற்கரிய பொதியில் மலையிலுள்ள தெய்வங்களையுடைய பக்கத்தில்வளர்ந்த சந்தனத்தைப்போல வேனிற்காலத்தில் இத்தலைவி குளிர்ச்சியையுடையாள் பனிக்காலத்தில் அடக்கிக்கொண்ட சூரியனுடைய கதிர்கள் மறைய குவிந்து அழகிதாக அசைகின்ற வெயிலை உட்பொதிந்ததாமரை மலரின் உள்ளிடத்தைப்போன்ற சிறிய வெம்மையை உடையாள்.
முடிபு: வேனிலானே தண்ணியள்; பனியில் சிறு வெம்மையள்.
கருத்து: தலைவி பிரிதற்கரிய இயல்பினள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 376. நெய்தல் - தலைவன் கூற்று, இலக்கியங்கள், தலைவன், நெய்தல், குறுந்தொகை, கூற்று, தண்ணியள், சங்க, எட்டுத்தொகை