குறுந்தொகை - 370. மருதம் - பரத்தை கூற்று
(“பரத்தை தலைவனைப் புறம்போகாவாறு பிணித்துக் கொண்டாள்” என்று தலைவி கூறியதாக அறிந்த பரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்ப, “தலைவன் ஈண்டு இருப்பின் அவனோடு பொருந்தியும் அவன் பிரியின் யாம் தனித்தும் இருப்பேம்” என்று கூறியது.)
பொய்கை யாம்ப லணிநிறக் கொழுமுகை வண்டுவாய் திறக்குந் தண்டுறை யூரனொடு இருப்பி னிருமருங் கினமே கிடப்பின் வில்லக விரலிற் பொருந்தியவன் நல்லகஞ் சேரி னொருமருங் கினமே. |
5 |
- வில்லகவிரலினார். |
பொய்கையிலே உள்ள ஆம்பலினது அழகிய நிறத்தையுடைய கொழுவிய அரும்பில் வண்டுகள் இதழைத் திறக்கும் தண்ணியநீர்த்துறைகளையுடைய ஊருக்கு உரியனாகிய தலைவனோடு நாம் இருந்தால் இரண்டுஉடலையுடையேம்; அவரோடு துயின்றால் வில்லை அகப்படப் பிடித்தவிரல்களைப் போலப் பொருந்தி அவன் தனது நல்ல அகத்தின்கண்ணே சேர்ந்தால் ஓர் உடலை யுடையேம்.
முடிபு: ஊரனொடு இருப்பின் இருமருங்கினம்; கிடப்பின் பொருந்தி, சேரின் ஒரு மருங்கினம்.
கருத்து: தலைவன் தன் விருப்பத்திற்கேற்ப ஒழுகாநிற்ப, யாம் அவன் ஒழுகியவாறே ஒழுகுவேம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 370. மருதம் - பரத்தை கூற்று, பரத்தை, இலக்கியங்கள், கூற்று, அவன், குறுந்தொகை, மருதம், கிடப்பின், பொருந்தி, கினமே, இருப்பின், எட்டுத்தொகை, சங்க, யாம்