குறுந்தொகை - 36. குறிஞ்சி - தலைவி கூற்று
(தலைவன் வரைபொருளின் பொருட்டுப் பிரிந்த காலத்தில் அப்பிரிவைத் தலைவி ஆற்றாளெனக் கவலையுற்ற தோழியை நோக்கித் தலைவி, “தலைவர் முன்பு பிரியேன் என்று சூளுறவு செய்து இப்பொழுது பிரிந்துறைய, அதனால் உண்டான வருத்தத்தைப் பொறுத்துக் கொண்டு யான் இருப்பவும் நீ வருந்துதல் முறையன்று” என்று உணர்த்தியது.)
துறுக லயலது மாணை மாக்கொடி துஞ்சுகளி றிவரும் குன்ற நாடன் நெஞ்சுகள னாக நீயலென் யானென நற்றோள் மணந்த ஞான்றை மற்றவன் தாவா வஞ்சின முரைத்தது |
5 |
நோயோ தோழி நின்வயி னானே. | |
- பரணர். |
தோழி! உருண்டைக் கல்லின் அயலில் உள்ளதாகிய மாணை என்னும் பெரிய கொடியானது தூங்குகின்ற களிற்றின்மேல் படரும் குன்றங்களை உடைய நாட்டிற்குத் தலைவன் யான்! நின் நெஞ்சு இடமாக இருந்து பிரியே என்று எனது நல்ல தோளை அணைந்த பொழுது அத்தலைவன் கெடாத உறுதிமொழியைக் கூறியது நின் திறத்தில் வருத்தத்திற்குக் காரணமாகுமோ? ஆகாதன்றே.
முடிபு: தோழி, நாடன் மணந்த ஞான்றை அவன் வஞ்சினம் உரைத்தது நின்வயின் நோயோ?
கருத்து: தோழி, தலைவன் வஞ்சினத்தை உரைத்து மறந்திருத்தல் எனக்குத் துன்பம் தருவது; அதனை நானே பொறுத்து ஆற்றியிருப்ப உனக்கு வருத்தம் உண்டாதற்குக் காரணமில்லை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 36. குறிஞ்சி - தலைவி கூற்று, தலைவி, இலக்கியங்கள், தோழி, குறிஞ்சி, தலைவன், கூற்று, குறுந்தொகை, ஞான்றை, நோயோ, நின், மணந்த, நாடன், எட்டுத்தொகை, யான், மாணை, சங்க