குறுந்தொகை - 358. முல்லை - தோழி கூற்று
(தலைவனது பிரிவின்கண் வருந்திய தலைவியை நோக்கி, “இதோகார்ப்பருவம் வந்தது; அதனைத் தெரிவிக்கும் முல்லைக் கொடிகளும்அரும்பின; இனி அவர் வருவர்” என்று தோழி கூறியது.)
வீங்கிழை நெகிழ விம்மி யீங்கே எறிகண் பேதுற லாய்கோ டிட்டுச் சுவர்வாய் பற்றுநின் படர்சே ணீங்க வருவேம் என்ற பருவம் உதுக்காண் தனியோர் இரங்கும் பனிகூர் மாலைப் |
5 |
பல்லான் கோவலர் கண்ணிச் சொல்லுப அன்ன முல்லைமென் முகையே. |
|
- கொற்றனார். |
செறிந்திருந்த அணி கலன்கள் நெகிழும்படி அழுது இவ்வாறு நீர்த்துளிகளை வெளிவிடும் கண்ணோடு மயங்கற்க. ஆராய்கின்ற கோடுகளைக் கிழித்து சுவரினிடத்தைப் பற்றி நிற்கும் நினது துன்பம் நெடுந் தூரம் போகும்படி மீண்டு வருவேம் என்று தலைவர் கூறிய பருவமானது இது பார் முல்லையினது மெல்லிய அரும்புகள் தலைவரைப் பிரிந்ததனிமையையுடையோர் வருந்துதற்குக் காரணமாகிய குளிர்ச்சி மிக்க மாலைக்காலத்தில் பல பசுக்களை யுடைய இடையர்களது மாலையிடத்தே இருந்து இப்பருவத்தைச் சொல்லுவனவற்றைப் போன்றன.
முடிபு: பேதுறல்; நின் படர் நீங்க வருவேமென்ற பருவம் உதுக் காண்; முல்லைமென்முகை சொல்லுபவன்ன.
கருத்து: தலைவர் கூறிச் சென்ற கார்ப்பருவம் வந்ததாதலின்அவர் விரைவில் வருவர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 358. முல்லை - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, முல்லை, குறுந்தொகை, கூற்று, தலைவர், பருவம், எட்டுத்தொகை, சங்க, வருவேம்