குறுந்தொகை - 344. முல்லை - தலைவி கூற்று
(தலைவன் பிரிந்த காலத்தில் வருந்திய தன்னை வற்புறுத்துந்தோழியை நோக்கி, “இக்காலத்தில் தம்மைப் பிரிந்து சென்ற தலைவர்வரப்பெறும் பேறுடைய மகளிர் தவஞ்செய்தாராவார்; யான் அதுபெற்றிலேன்” என்று தலைவி கூறியது.)
நோற்றோர் மன்ற தோழி தண்ணெனத் தூற்றுந் துவலைப் பனிக்கடுந் திங்கட் புலம்பயி ரருந்த அண்ண லேற்றொடு நிலந்தூங் கணல வீங்குமுலைச் செருத்தல் பால்வார்பு குழவி யுள்ளி நிரையிறந் |
5 |
தூர்வயிற் பெயரும் புன்கண் மாலை அரும்பெறற் பொருட்பிணிப் போகிப் பிரிந்துறை காதலர் வரக்காண் போரே. |
|
- குறுங்குடி மருதனார். |
தோழி! குளிர்ச்சி உண்டாகும்படி வீசுகின்ற துளிகளாகிய பனியையுடைய கடுமையாகிய மாதத்தில் மேய்புலத்தின்கண்ணேயுள்ள பயிரை அருந்திய தலைமையையுடையஎருதோடு நிலத்தளவும் நாலுகின்றஅலைதாடியை யுடையனவாகிய பால் நிரம்புதலாற் பருத்த முலைக்காம்பையுடைய மடியையுடைய பசுக்கள் பாலை ஒழுகவிட்டு தம் கன்றுகளை நினைந்து தம்மோடு ஒருங்கு மேயும் ஏனைய நிரைகளை நீங்கி ஊரினிடத்தே மீண்டு வருகின்ற துன்பத்தைத் தரும் மாலைக்காலத்தில் அரிதிற் பெறுகின்றபொருள்மேற் சென்ற நெஞ்சப் பிணிப்பினை நிறைவேற்றச்சென்று தம்மை முன்பிரிந்துஉறைந்த தலைவர்கள் மீண்டுவரக்காணும்மகளிர் நிச்சயமாக தவஞ் செய்த வராவர்.
முடிபு: தோழி, மாலையில் காதலர் வரக்காண்போர் நோற்றோர் மன்ற.
கருத்து: தலைவர் இப்பொழுது வந்திலராதலின் யான் வருந்துவேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 344. முல்லை - தலைவி கூற்று, தலைவி, இலக்கியங்கள், கூற்று, முல்லை, தோழி, குறுந்தொகை, மன்ற, காதலர், நோற்றோர், சென்ற, எட்டுத்தொகை, சங்க, யான்