குறுந்தொகை - 343. பாலை - தோழி கூற்று
(தோழி தலைவியிடம், “நீ தலைவனுடன் செல்வதை விரும்பிமேற்கொள்வாயாக” என்றது.)
நினையாய் வாழி தோழி நனைகவுள் அண்ணல் யானை அணிமுகம் பாய்ந்தென மிகுவலி இரும்புலிப் பகுவா யேற்றை வெண்கொடு செம்மறுக் கொளீஇ விடர்முகைக் கோடை யொற்றிய கருங்கால் வேங்கை |
5 |
வாடுபூஞ் சினையிற் கிடக்கும் உயர்வரை நாடனொடு பெயரும் ஆறே. |
|
- ஈழத்துப் பூதன்றேவனார். |
தோழி! மிக்க வலியையுடைய பெரிய புலியினது பிளந்த வாயையுடைய ஆணானது மதத்தால் நனைந்தகவுளையுடைய தலைமையையுடைய யானையினது அழகிய முகத்தின் கண்ணே பாய்ந்ததாக அவ்யானையின் வெள்ளிய கொம்பைத் தனது இரத்தத்தால்செவ்விய கறையைக் கொள்ளச் செய்து பிளப்பையுடைய கன்முழையிலுள்ள மேல்காற்று வீழ்த்திய கரிய அடியையுடையவேங்கை மரத்தினது வாடியபூவையுடைய கிளையைப் போல இறந்து கிடக்கும் உயர்ந்த மலையையுடைய நாட்டையுடைய தலைவனுடன் போகும் திறத்தை நீ எண்ணுவாயாக; நீ வாழ்வாயாக!
முடிபு: தோழி, நாடனொடு பெயருமாறு நினையாய்; வாழி!
கருத்து: நீ தலைவனுடன் செல்லுதலே நன்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 343. பாலை - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், பாலை, குறுந்தொகை, கூற்று, தலைவனுடன், கிடக்கும், நாடனொடு, வாழி, சங்க, எட்டுத்தொகை, நினையாய்