குறுந்தொகை - 341. நெய்தல் - தலைவி கூற்று
(தலைவன் கூறிச்சென்ற பருவம் வந்த காலத்து வருந்துவாளெனக் கவன்ற தோழிக்கு, “அவர் தம் காரியத்தை முற்ற முடித்தபின் வருவரென்று துணிந்து ஆற்றினேன்” என்று தலைவி கூறியது.)
பல்வீ பட்ட பசுநனைக் குரவம் பொரிப்பூம் புன்கொடு பொழிலணிக் கொளாஅச் சினையினி தாகிய காலையுங் காதலர் பேணா ராயினும் பெரியோர் நெஞ்சத்துக் கண்ணிய ஆண்மை கடவ தன்றென |
5 |
வலியா நெஞ்சம் வலிப்ப வாழ்வேன் தோழியென் வன்க ணானே. |
|
- மிளைகிழார் நல்வேட்டனார். |
தோழி! பல மலர்கள் தோன்றிய பசிய அரும்புகளையுடைய குராமரம் நெற்பொரியைப் போன்றபூக்களையுடைய புன்க மரத்தோடு சோலையின் கண் அழகைக் கொண்டு கிளை கண்ணுக்கு இனிதாகத் தோற்றிய இப்பருவத்திலும் தலைவர் நம்மை விரும்பிப் பாதுகாவாராயினும் பெரியோர்கள் தம் நெஞ்சத்திலே நினைத்த மேற்கோள் செலுத்தப்படுவதன் றென்றெண்ணி முன்னர்த் துணியாத என் நெஞ்சம் பின்னர்த் துணிந்தமையால் எனது தறுகண்மையால் உயிரோடு வாழ்வேனாயினேன்.
முடிபு: தோழி, காதலர் பேணாராயினும் நெஞ்சம் வலிப்ப என்வன்கணான் வாழ்வேன்.
கருத்து: தலைவர் தம்வினை முடித்து வருவரென்னும் துணிவினால்வாழ்வேனாயினேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 341. நெய்தல் - தலைவி கூற்று, தலைவி, இலக்கியங்கள், கூற்று, நெஞ்சம், குறுந்தொகை, நெய்தல், தோழி, தலைவர், வாழ்வேன், காதலர், எட்டுத்தொகை, சங்க, வலிப்ப