குறுந்தொகை - 338. பாலை - தோழி கூற்று
(தலைவனது பிரிவினால் வருந்திய தலைவியை நோக்கி, “தலைவன்வந்தான்” என்று துணிவுபற்றிக் கூறித் தோழி ஆற்றுவித்தது.)
திரிமருப் பிரலை யண்ணல் நல்லேறு அரிமடப் பிணையோ டல்குநிழ லசைஇ வீததை வியலரில் துஞ்சிப் பொழுதுசெலச் செழும்பயறு கறிக்கும் புன்கண் மாலைப் பின்பனிக் கடைநாள் தண்பனி அச்சிரம் |
5 |
வந்தன்று பெருவிறல் தேரே பணைத்தோள் விளங்குநக ரடங்கிய கற்பின் நலங்கே ழரிவை புலம்பசா விடவே. |
|
- பெருங்குன்றூர்கிழார். |
மூங்கிலைப் போன்றதோள்களையும் விளங்கியஇல்லின் கண்ணே அடங்கிய கற்பையுமுடைய அழகு பொருந்திய தலைவி தனிமையால் உண்டான துன்பம் நீங்கும்வண்ணம் மிக்க வெற்றியையுடையதலைவனது தேர் முறுக்கின கொம்பையுடைய இரலையாகிய தலைமையையுடைய நல்ல ஆண்மான் மென்மையையும் மடப்பத்தையுமுடைய பெண்மானோடு தாம் தங்குதற்குரிய நிழலினிடத்தேதங்கி மலர்கள் நெருங்கிய அகன்றபிணக்கத்தையுடைய தூற்றினிடத்தே தூங்கி பொழுது போனமையின் செழுவிய பயற்றம்பயிரைக் கறித்துத் தின்னும் துன்பத்தைத் தரும் மாலைக் காலத்தினையும் பின் பனியையுமுடைய கடையாமத்தையும் குளிர்ந்த பனியையுமுடைய அச்சிரக் காலத்தில் வந்தது.
முடிபு: அரிவை, புலம்பு அசாவிடப் பெருவிறல் தேர் வந்தன்று.
கருத்து: தலைவன் மீண்டு விரைவில் வருவான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 338. பாலை - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, பாலை, குறுந்தொகை, கூற்று, தேர், பெருவிறல், பனியையுமுடைய, சங்க, எட்டுத்தொகை, வந்தன்று