குறுந்தொகை - 337. குறிஞ்சி - தலைவன் கூற்று
(இரந்து பின்னின்ற தலைவனுக்குத் தோழி தலைவியின் இளமைத்தன்மை கூறியபொழுது, அவன் அவள் பருவம் வாய்த்ததையும் தன்னைவருத்திய வண்ணத்தையும் உணர்த்தியது.)
முலையே முகிழ்முகிழ்த் தனவே தலையே கிளைஇய மென்குரல் கிழக்கு வீழ்ந் தனவே செறிநிரை வெண்பலும் பறிமுறை நிரம்பின சுணங்குஞ் சிலதோன் றினவே யணங்குதற் கியான்ற னறிவலே தானறி யலளே |
5 |
யாங்கா குவள்கொ றானே பெருமுது செல்வ ரொருமட மகளே. |
|
- பொதுக்கயத்துக் கீரந்தையார். |
நகில்கள் அரும்பின; தலையில் கிளைத்த மெல்லிய மயிர்க்கொத்துக்கள் கீழேதாழ்ந்தன; செறிந்த வரிசையாகியவெள்ளிய பல்லும் முதன்முறைவிழுந்து முற்றும் முளைத்து நிரம்பின; தேமலும் சில வெளிப்பட்டன; அவள் வருத்தும் பொருட்டு நான் அவளைஅறிவேன்; அவள் அதனை அறிந்திலள்; பெரிய முதிய செல்வத்தையுடையாரது ஒப்பற்ற மடப்பத்தையுடைய தலைவியாகிய அவள் எத்தன்மையையுடையவளாவளோ?
முடிபு: முலை முகிழ் முகிழ்த்தன; தலை குரல் வீழ்ந்தன; பல்லும்நிரம்பின; சுணங்கும் தோன்றின; யான் தன்னறிவல்; தான் அறியலள்; மடமகள் யாங்காகுவள் கொல்?
கருத்து: தலைவி பருவம் வாய்த்தவளாகி என்னை வருத்தினாள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 337. குறிஞ்சி - தலைவன் கூற்று, இலக்கியங்கள், அவள், குறிஞ்சி, குறுந்தொகை, தலைவன், கூற்று, தனவே, நிரம்பின, சங்க, எட்டுத்தொகை, பருவம்