குறுந்தொகை - 323. முல்லை - தலைவன் கூற்று
(தான் மேற்கொண்ட வினை முடிந்தவிடத்துத் தலைவன் பாகனைநோக்கி, "தலைவியைப் பிரிந்திருக்கும் நாள் நன்னாளன்று; பயனற்றது;ஆதலின் அவளை யடையும்படி விரைவில் தேர் விடுக" என்பது படச்சொல்லியது.)
எல்லாம் எவனோ பதடி வைகல் பாணர் படுமலை பண்ணிய எழாலின் வானத் தெழுஞ்சுவர் நல்லிசை வீழப் பெய்த புலத்துப் பூத்த முல்லைப் பசுமுகைத் தாது நாறும் நறுநுதல் |
5 |
அரிவை தோளிணைத் துஞ்சிக் கழிந்த நாளிவண் வாழு நாளே. |
|
- பதடி வைகலார். |
பாணர்கள்படுமலைப் பாலையென்னும் பண்ணை வாசித்த இசையினது வானத்தின்கண் எழுகின்ற நல்ல உச்ச ஒலியை ஒப்ப ஒலி யுண்டாக மழை பெய்த கொல்லையின் கண் மலர்ந்த முல்லையினது பசிய அரும்பினது தாதின் மணம் போன்றமணம் வீசுகின்ற நல்ல நெற்றியையுடைய தலைவியின் இரண்டு தோள்களிலேதுயின்று சென்றநாட்களே இவ்வுலகத்தில் வாழும் நாட்களாகும்; ஏனைய நாட்களெல்லாம் என்ன பயனை உடையன? அவை உள்ளீடில்லாத கருக்காயைப்போன்ற நாட்கள்.
முடிபு: அரிவை தோளிணைத் துஞ்சிக் கழிந்த நாள் வாழும் நாள்;எல்லாம் எவனோ? பதடிவைகல்.
கருத்து: விரைவில் தலைவிபாற் போய்ச் சேர்தல் வேண்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 323. முல்லை - தலைவன் கூற்று, இலக்கியங்கள், தலைவன், நாள், குறுந்தொகை, கூற்று, முல்லை, துஞ்சிக், தோளிணைத், நல்ல, வாழும், அரிவை, கழிந்த, எல்லாம், சங்க, எட்டுத்தொகை, விரைவில், எவனோ, பதடி, பெய்த