குறுந்தொகை - 317. குறிஞ்சி - தோழி கூற்று
(தலைவன் பிரிந்த காலத்தில் ஆற்றாளாகிய தலைவியை நோக்கி,"தலைவன் குறித்த பருவத்தே வருவான்" என்று தோழி கூறி வற்புறுத்தியது.)
புரிமட மரையான் கருநரை நல்லேறு தீம்புளி நெல்லி மாந்தி யயலது தேம்பாய் மாமலர் நடுங்க வெய்துயிர்த் தோங்குமலைப் பைஞ்சுனை பருகு நாடன் நம்மைவிட் டமையுமோ மற்றே கைம்மிக |
5 |
வடபுல வாடைக் கழிமழை தென்புலம் படருந் தண்பனி நாளே. |
|
- மதுரைக் கண்டரதத்தனார். |
விரும்புகின்ற மடப்பத்தையுடைய மரையானினது கருமையையும் பெருமையையுமுடைய நல்ல ஆண் இனிய புளிப்பையுடைய நெல்லிக்காயைத்தின்று அருகில் உள்ளதாகிய தேன் பரவிய அழகிய மலர்கள் நடுங்கும்படி வெப்பமாகிய மூச்சை விட்டு உயர்ந்த மலையினிடத்துள்ள பசிய சுனைநீரை உண்ணுகின்ற நாட்டையுடைய தலைவன் மிகும்படி வடதிசையினின்றும் வரும் வாடைக்காற்றுக்கு அழிந்தமேகம் தென்திசையை நோக்கிச்செல்லும் தண்ணிய பனிப்பருவத்தில் இன்றியமையாத நம்மைப்பிரிந்து பொருந்துவானோ? பொருந்தான்.
முடிபு: நாடன், தண்பனி நாளில் நம்மைவிட்டு அமையுமோ?
கருத்து: தலைவன் குறித்த பருவத்தில் வந்துவிடுவான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 317. குறிஞ்சி - தோழி கூற்று, இலக்கியங்கள், தலைவன், தோழி, குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, நாடன், தண்பனி, சங்க, எட்டுத்தொகை, குறித்த