குறுந்தொகை - 312. குறிஞ்சி - தலைவன் கூற்று
(இரவுக்குறிக்கண் தலைவியை எதிர்ப்பட்டு நீங்கும் தலைவன் தன்நெஞ்சை நோக்கி, “இவள் இரவில் நம்மோடு ஒத்த ஒழுக்கமும் பகலில்அயலாரைப் போன்ற ஒழுக்கமும் உடையளாக இருக்கும் ஆற்றலுடையாள்” என்று கூறி வியந்தது.)
இரண்டறி கள்விநங் காத லோளே முரண்கொள் துப்பிற் செவ்வேன் மலையன் முள்ளூர்க் கான நாற வந்து நள்ளென் கங்குல் நம்மோ ரன்னள் கூந்தல் வேய்ந்த விரவுமலர் உதிர்த்துச் |
5 |
சாந்துளர் நறுங்கதுப் பெண்ணெய் நீவி அமரா முகத்த ளாகித் தமரோ ரன்னள் வைகறை யானே. |
|
- கபிலர். |
நெஞ்சே! நம் தலைவி இரு வேறுபட்ட ஒழுகலாற்றைஅறிந்த கள்ளத் தன்மையை யுடையாள் செறிந்த இருளையுடைய இரவில் மாறுபாட்டைக் கொண்ட வலியையுடைய சிவந்த வேலையுடைய மலையனது முள்ளூர் மலைக்காட்டிலுள்ளநறுமணத்தைப் போன்ற மணம் வீசும்படி வந்து நம்மோடு ஒத்தவளாயினள்; விடியற் காலத்தில் யான் தனது கூந்தலில் அணிந்த பலவாகக் கலந்தமலர்களை உதிர்த்துவிட்டு மயிர்ச் சாந்தையிட்டுக் கோதிய நறியகூந்தலில் எண்ணெயைத் தடவி பொருந்தாத முகத்தையு டையவளாகி தன் தமரோடு ஒத்தவளாயினள்.
முடிபு: நம் காதலோள் இரண்டறி கள்வி; நள்ளென் கங்குல் வந்துநம்மோரன்னள்; வைகறையான், உதிர்த்து நீவி ஆகித் தமரோ ரன்னள்.
கருத்து: தலைவி நம்முடைய தொடர்பை அயலார் அறியா வண்ணம் கரந்து ஒழுகுகின்றாள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 312. குறிஞ்சி - தலைவன் கூற்று, இலக்கியங்கள், தலைவன், ரன்னள், குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, நீவி, கங்குல், தலைவி, ஒத்தவளாயினள், நள்ளென், தமரோ, ஒழுக்கமும், சங்க, எட்டுத்தொகை, இரவில், நம்மோடு, இரண்டறி, வந்து