குறுந்தொகை - 311. நெய்தல் - தலைவி கூற்று
(“இரவில் தலைவன் ஈண்டு வந்து செல்வதை ஆயத்தார் யாவரும்அறிந்தனர்; அதனால் அலர் பெருகியது” என்று தலைவி, தலைவன்சிறைப்புறத்தில் இருப்பத் தோழிக்குச் சொல்லியது.)
அலர்யாங் கொழிவ தோழி பெருங்கடற் புலவுநா றகன்றுறை வலவன் தாங்கவும் நில்லாது கழிந்த கல்லென் கடுந்தேர் யான்கண் டனனோ இலனோ பானாள் ஓங்கல் வெண்மணல் தாழ்ந்த புன்னைத் |
5 |
தாதுசேர் நிகர்மலர் கொய்யும் ஆயம் எல்லாம் உடன்கண் டன்றே. |
|
- சேந்தன் கீரனார். |
தோழி! பெரிய கடலினது புலால் நாற்றம் வீசும் அகன்றதுறையின் கண்ணே பாகன் தடுக்கவும் நில்லாமற் சென்ற கல்லென ஆரவாரம் செய்யும் விரைந்த தலைவனது தேரை யான் கண்டேனோ இல்லையோ நடு இரவின் கண் உயர்ச்சியையுடைய வெள்ளியமணலினிடத்துத் தாழ்ந்து வளர்ந்த புன்னை மரத்தினது மகரந்தம் சேர்ந்த ஒளியையுடைய மலர்களைப் பறிக்கும் மகளிர் கூட்டமெல்லாம் ஒருங்கே கண்டது; இங்ஙனமாக எவ்வாறு பழிமொழிஒழிவனவாகும்.
முடிபு: தோழி, தேர் யான் கண்டனனோ இலனோ, ஆயமெல்லாம்கண்டன்று; அலர் யாங்கு ஒழிவ?
கருத்து: தலைவன் வந்து செல்வதை யாவரும் அறிந்து பழிமொழிகூறுகின்றனர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 311. நெய்தல் - தலைவி கூற்று , தலைவி, இலக்கியங்கள், கூற்று, தோழி, குறுந்தொகை, நெய்தல், இலனோ, யான், அலர், தலைவன், எட்டுத்தொகை, சங்க, வந்து, செல்வதை