குறுந்தொகை - 313. நெய்தல் - தலைவி கூற்று
(இரவுக்குறி வந்த தலைவன் சிறைப்புறமாக இருப்பத்தோழி,இயற்பழித்த விடத்துத் தலைவி "அவரது நட்பு என்றும் அழியாதது"என்று கூறியது.)
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை நீத்துநீர் இருங்கழி இரைதேர்ந் துண்டு பூக்கமழ் பொதும்பிற் சேக்குந் துறைவனொடு யாத்தேம் யாத்தன்று நட்பே அவிழ்த்தற் கரிதது முடிந்தமைந் தன்றே. |
5 |
- ...... |
தோழி! பெரிய கடற்கரையின் கண்ணதாகிய சிறியவெண்மையையுடைய காக்கையானது வெள்ளமாகிய நீரையுடைய கரியகழியிடத்து மீனாகிய இரையைத் தேடி உண்டு மலர் மணம் வீசும்சோலையினிடத்துத் தங்கும் துறையையுடைய தலைவனோடு நம்மைக் கட்டினேம்; அங்ஙனம் கட்டப்பட்ட நட்பு நன்றாகப் பொருந்தியது; அது பிறராற் பிரித்தற்கு அரியதாகி முடிக்கப்பட்டு அமைந்தது.
முடிபு: துறைவனோடு யாத்தேம்; நட்புயாத்தன்று; அது அவிழ்த்தற்கரிதாகி, முடிந்தமைந்தன்று.
கருத்து: தலைமகனது நட்பு அழியாதது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 313. நெய்தல் - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, நெய்தல், நட்பு, குறுந்தொகை, கூற்று, அழியாதது, யாத்தேம், எட்டுத்தொகை, சங்க